Published : 26 Oct 2021 11:21 AM
Last Updated : 26 Oct 2021 11:21 AM

கரூரில் மாற்றுத்திறனாளி மகனுடன் வந்து வீடு கேட்ட பெண்ணுக்கு 1 மணி நேரத்தில் வீடு ஒதுக்கீடு செய்த ஆட்சியர்: தலைமைச் செயலர் பாராட்டு

கரூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு 29 வயது மாற்றுத்திறனாளி மகனுடன் வந்து வீடு கேட்ட பெண்ணுக்கு 1 மணிநேரத்தில் வீடு வழங்கிய மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கருக்கு தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு பாராட்டு தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமையில் கடந்த 11 ஆம் தேதி மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது கரூர் காந்தி கிராமத்தைச் சேர்ந்த சந்திரா தனது மாற்றுத்திறனாளி மகன் ரவிச்சந்திரனுடன் (29) வந்து கோரிக்கை மனு அளித்தார்.

அதில், தனது மகன் கை, கால் இயங்காத, வாய் பேச இயலாத நிலையில் உள்ள மாற்றுத்திறனாளி என்றும், தான் கணவனால் கைவிடப்பட்டவர் என்பதால் ஆதரவற்ற நிலையில் இருப்பதாகவும், இருக்க வீடு இல்லை என்றும், தற்போது தனது உறவினர் வீட்டில் வசித்து வருவதாகவும், மாற்றுத்திறனாளி மகன் இருப்பதால் வாடகைக்கு கூடயாரும் வீடு தர மறுக்கின்றனர் என தெரிவித்தார்.

அவரின் நிலை உணர்ந்த மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி உத்தரவின்படி அந்தப் பெண்ணுக்கு கரூர் காந்திகிராமத்தில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கிக் கொடுக்க துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், மாற்றுத்திறனாளி மகனை எளிதில் அழைத்துச் செல்ல ஏதுவாக தரைதளத்தில் வீடு ஒதுக்குமாறும், சக்கர நாற்காலி சென்று வர ஏதுவாக சாய் தளவசதிகள் செய்து தருமாறும் மாவட்ட ஆட்சியர் துறைஅலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறைஅமைச்சர் வி.செந்தில்பாலாஜி உத்தரவின்அடிப்படையில், 1 மணி நேரத்திற்குள் பயனாளிக்கு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வழங்கியதற்கான ஆணையினை மாவட்டஆட்சியர் த.பிரபுசங்கர் வழங்கினார். மேலும், குடியிருப்பிற்கு பயனாளி செலுத்த வேண்டிய தொகையான ரூ.1.88 லட்சத்தை மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியில் இருந்து செலுத்துவதாக தெரிவித்தார். அதனடிப்படையில் 1 மணி நேரத்தில் அந்தப்பெண்ணுக்கு ரூ.8.35 லட்சம் மதிப்பிலான வீடு தரைதளத்தில் ஒதுக்கப்பட்டது.

இதுகுறித்து அறிந்த தமிழக தலைமைச்செயலாளர் வெ.இறையன்பு மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கரின் நடவடிக்கையை அறிந்து அவரை பாராட்டி வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார்.

அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், "அன்பார்ந்த (மருத்துவர்) பிரபுசங்கர், கரூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், ஐம்பது வயது மதிக்கத்தக்க ஆதரவற்ற பெண்ணிற்கு உடனடி நிவாரணமாக தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலமாக வீடு ஒன்றினை ஒதுக்கீடு செய்து அப்பெண்ணிற்கும் அவரது உடல் ஊனமுற்ற மகனுக்கும் வாழ்க்கையில் மகிழ்ச்சியை ஏற்படுத்திய தங்களது நிர்வாகப் பணியை நான் மனதாரப் பாராட்டுகிறேன்.

தங்களின் பணிமென்மேலும் சிறக்க எனது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ள அவர் மேலும் கைப்பட நல்வாழ்த்துகள் என கையெழுத்திட்டுள்ளார்.

மேலும் ஒரு பெண்ணுக்கு வீடு:

கரூர் மாவட்டத்தில் பொதுமக்களை சந்தித்து மனுக்களைப் பெறும் மக்கள் சபை நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமையில் குளித்தலை நகராட்சி மற்றும் மாவட்டத்தில் உள்ள 11 பேரூராட்சிகளில் கடந்த 17 ஆம் தேதி நடைபெற்றது.

மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத்துறைஅமைச்சர் வி.செந்தில்பாலாஜி பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார்.

பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சியில் நடந்த மக்கள் சபை நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் வட்டம் மணவாசியை சேர்ந்த செல்வி என்ற பெண் 3 மகள்களுடன் ஆதரவற்ற நிலையில் வசிப்பதாகவும், அதில் ஒரு மகள் கை, கால்கள் இயங்காத நிலையில் உள்ள மாற்றுத்திறனாளி மகள் என்றும் தங்கள் வசிக்க வீடு கூட இல்லாத நிலையில் உள்ளதாக தெரிவித்தார்.

இதையடுத்து மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டுவாரிய குடியிருப்பில் தரைத்தளத்தில் அவர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்துகொடுக்க உத்தரவிட்டார்.

அவர் மனுஅளித்த 24 மணிநேரத்தில் அவருக்கு கரூர் காந்தி கிராமம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலமாக வீடு ஒதுக்கீடு செய்து அதற்கான ஆணையை மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் கடந்த 18 ஆம் தேதி நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் செல்விக்கு வீடு ஒதுக்கியதற்கான ஆணையை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x