Published : 26 Oct 2021 03:06 AM
Last Updated : 26 Oct 2021 03:06 AM

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பசும்பொன் தேவர் சிலைக்கு தங்கக் கவசம் அணிவிப்பு

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பசும்பொன் தேவர் சிலைக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 114-வது ஜெயந்தி விழா மற்றும் 59-வது குருபூஜை விழா வரும் 30-ம் தேதி நடைபெற உள்ளது. இவ்விழாவை முன்னிட்டு கடந்த 2014-ம் ஆண்டு அதிமுக சார்பில் ரூ.4.50 கோடி மதிப்பில் 13.5 கிலோ எடையில் தேவர் சிலைக்கு வழங்கப்பட்ட தங்கக் கவசம் நேற்று மதுரை பேங்க் ஆஃப் இந்தியா வங்கிக் கிளை பெட்டகத்தில் இருந்து ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் தேவர் நினைவிடப் பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் தலைமையில் பசும்பொன்னுக்கு எடுத்து வரப்பட்டது.

முன்னதாக மதுரை வங்கிக் கிளையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், தேவர் நினைவிடப் பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் ஆகியோர் வங்கியில் கையெழுத்திட்டு தேவர் தங்கக் கவசத்தை பெற்றனர்.

அப்போது முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், எம்.மணிகண்டன், எம்எல்ஏக்கள் ஐயப்பன் (உசிலம்பட்டி), பெரியபுள்ளான் என்ற செல்வம் (மேலூர்) உள்ளிட்ட அதிமுகவினர் உடனிருந்தனர்.

கவசம் அணிவிப்பு

நேற்று மதியம் பசும்பொன் தேவர் நினைவிடத்தில் உள்ள தேவர் சிலைக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில், தேவர் நினைவிடப் பொறுப்பாளர்கள் காந்தி மீனாள் நடராஜன், தங்கவேலு, பழனி, அழகு ராஜா ஆகியோர் முன்னிலையில் தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் அதிமுக ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் எம்.ஏ.முனியசாமி உள்ளிட்ட அதிமுகவினர் பங்கேற்றனர். இதையடுத்து தேவர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

துப்பாக்கி ஏந்திய போலீஸ்

தங்கக் கவசம் அணிவிக்கப்பட்ட தேவர் சிலைக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த தங்கக் கவசம் அக்.31-ம் தேதி வரை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும். அதையடுத்து நவ.1-ல் தங்கக் கவசம் களையப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் மதுரை வங்கி பெட்டகத்துக்கு கொண்டு செல்லப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x