Published : 19 Mar 2016 08:38 PM
Last Updated : 19 Mar 2016 08:38 PM

பிளஸ் 2 வேதியியல் தேர்வு கடினம்: நிபுணர் குழு அமைத்து தீர்வு காண வைகோ வலியுறுத்தல்

பிளஸ் 2 பொதுத்தேர்வில் வேதியியல் பாடம் மிகவும் கடினமாக இருந்ததன் காரணத்தால், நிபுணர் குழு அமைத்து தீர்வு காண வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில் நடந்துள்ள 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வில் வேதியியல் பாட கேள்வித்தாள் மிகவும் கடினமாக இருந்ததாக மாணவர்கள் மன வருத்தத்தில் உள்ளனர். இதில், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு மாணவியும், விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு மாணவியும் தற்கொலை செய்துள்ளது மிகவும் வேதனைக்குரியதாகும்.

பள்ளித் தேர்வுகள் மாணவ - மாணவிகளுக்கு எந்த அளவுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை இந்தச் சம்பவம் நமக்குத் தெளிவாகத் தெரிவிக்கிறது. இத்தகைய சூழலிலிருந்து மாணவ, மாணவிகள் விடுவிக்கப்பட வேண்டும். தேர்வுகளை பயமில்லாமல் ஆர்வத்துடன் எதிர்கொள்ள உளவியல் ரீதியாக மாணவர்களை தயார் செய்யும் பணியை பள்ளி கல்வித்துறை மிக முக்கியமான பொறுப்பாக எடுத்துக்கொண்டு செயல்பட வேண்டும்.

இந்த வருடம் சிபிஎஸ்சி கணக்குப் பாடத் தேர்வு பதிலளிக்க முடியாத வகையில் கடினமாக இருந்ததால், சிபிஎஸ்சி வாரியம், நிபுணர் குழு அமைத்து தீர்வு காண முடிவு செய்துள்ளது.

வேதியியல் பாடம் மாணவர்களின் எதிர்கால வாய்ப்புகளுக்கு மிக முக்கியமான பாடமாகும். எனவே, இந்த வருடம் வேதியியல் தேர்வு குறித்து நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்து 12-ம் வகுப்பு மாணவர்களின் திறனுக்கு அதிகமாக, கடினமான கேள்விகள் கேட்கப்பட்டிருந்தால் மாணவர்களை பாதிக்காத வகையில் தமிழக பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று வைகோ தெரிவித்துள்ளார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x