அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த கூட்டுறவு சங்கத் தலைவர் மீது இயக்குநர்கள் மோசடி புகார்

அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த கூட்டுறவு சங்கத் தலைவர் மீது இயக்குநர்கள் மோசடி புகார்
Updated on
1 min read

அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த தஞ்சாவூர் கூட்டுறவு சங்கத் தலைவர் மீது அதிமுகவைச் சேர்ந்த கூட்டுறவு இயக்குநர்கள் 16 பேர் மோசடி புகார் அளித்துள்ளனர்.

தஞ்சாவூர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின்(காவேரி சிறப்பங்காடி) தலைவராக வி.பண்டரிநாதன் உள்ளார். அதிமுகவைச் சேர்ந்த இவர் 2 மாதங்களுக்கு முன்பு அக்கட்சியில் இருந்து விலகி, திமுகவில் சேர்ந்தார்.

இந்நிலையில், இவர் பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக கூட்டுறவு மண்டல இணைப் பதிவாளர் தமிழ்நங்கையிடம் அதிமுகவைச் சேர்ந்த கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் இயக்குநர்கள் 16 பேர் கையழுத்திட்ட புகார் மனு நேற்று அளிக்கப்பட்டது.

இந்த மனுவை தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் துரை.திருஞானம் தலைமையில், அதிமுக பகுதிச் செயலாளர்கள் அறிவுடைநம்பி, புண்ணியமூர்த்தி, சரவணன், ரமேஷ் உள்ளிட்டோர் வழங்கினர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

தஞ்சாவூர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் தலைவர் பண்டரிநாதன் பணி நியமனம், நிதி முறைகேடு, ஆவணங்களை திருத்துதல் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளார். இயக்குநர்கள் கூட்டத்தைக் கூட்டாமல், தன்னிச்சையாக தீர்மானங்களை குறிப்பேட்டில் எழுதி, கையெழுத்து வாங்கி, தனக்கு வேண்டியதுபோல திருத்திக்கொள்கிறார்.

தினக்கூலி வேலைக்கு ஆள் எடுக்காமல், தனது உறவினர்களின் பெயர்களை தினக்கூலி பட்டியலில் சேர்த்து, அந்த சம்பளத்தை அவரே எடுத்துக்கொள்கிறார். எனவே, பண்டரிநாதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புகார் மீது விசாரணை நடத்தி, தவறுகள் கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவு சங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in