Published : 28 Jun 2014 09:38 AM
Last Updated : 28 Jun 2014 09:38 AM

6.44 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்: முதல்வர் தொடக்கம்

பள்ளி மாணவ, மாணவிகள் 6.44 லட்சம் பேருக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா சென்னையில் தொடங்கிவைத்தார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் பெண் கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில் பிளஸ்1, பிளஸ்2 படிக்கும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்த மாணவிகள் அனைவருக்கும் சைக்கிள் வழங்கும் திட்டம் 2001-02ம் ஆண்டு முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டது. பின்பு, 2005-06ம் ஆண்டு முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பகுதியாக அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பிளஸ்1 பயிலும் அனைத்து பிரிவு மாணவ, மாணவிகளுக்கும் இத்திட்டத்தின் கீழ் சைக்கிள் வழங்கப்பட்டு வருகிறது.

இதுவரை இல்லாத வகையில், நடப்பு கல்வியாண்டின் தொடக்கத்திலேயே மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கும் வகையில் ரூ.230 கோடி 72 லட்சம் செலவில் 2,86,400 மாணவர்கள் மற்றும் 3,57,600 மாணவிகள் என மொத்தம் 6.44 லட்சம் பேருக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்து 7 பேருக்கு சைக்கிள் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் கள் என்.சுப்ரமணியன், கே.சி.வீரமணி, எஸ்.அப்துல் ரஹீம், தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், பிற்படுத்தப் பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மைச் செயலாளர் க. அருள்மொழி, ஆணையர் அசோக் டோங்ரே உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழக முதல்வர் ஜெயலலிதா, பள்ளி மாணவ மாணவியருக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார். படம்: வி.கணேசன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x