Published : 25 Oct 2021 06:32 PM
Last Updated : 25 Oct 2021 06:32 PM

இறக்குமதி கார் விவகாரம்; நீதிபதி தெரிவித்த கருத்துகள் தனிப்பட்ட முறையில் புண்படுத்தின: நடிகர் விஜய் தரப்பு வேதனை

இறக்குமதி காருக்கு வரி செலுத்துவது தொடர்பான வழக்கில், நீதிபதி தெரிவித்த கருத்துகள் தன்னைத் தனிப்பட்ட முறையில் புண்படுத்தியதுடன், குற்றவாளி போலக் காட்டியுள்ளதாக, நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வேதனை தெரிவிக்கப்பட்டது.

நடிகர் விஜய் கடந்த 2012ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சொகுசு காரை இறக்குமதி செய்தார். இந்த காரைப் பதிவு செய்ய வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை அணுகியபோது, வாகனத்துக்கு நுழைவு வரி செலுத்த அறிவுறுத்தப்பட்டது.

இதையடுத்து, காரை இறக்குமதி செய்தபோது, இறக்குமதி வரி செலுத்தியுள்ள நிலையில், நுழைவு வரி விதிக்கத் தடை விதிக்க வேண்டும் என, விஜய் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றத் தனி நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் தள்ளுபடி செய்தார்.

நடிகர்கள் முறையாக உரிய நேரத்தில் வரி செலுத்த வேண்டும் என்றும், அவர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டுமே தவிர ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது எனவும் கருத்து தெரிவித்த நீதிபதி, நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

அபராதம் விதித்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்தும், தனி நீதிபதியின் தீர்ப்பில் உள்ள விமர்சனங்களை நீக்கக் கோரியும் நடிகர் விஜய் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா மற்றும் முகமது ஷபீக் அமர்வில் இன்று (அக்.25) விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர் விஜய் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, தனி நீதிபதியின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்தை நீக்கவும், தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கவும், ஒரு லட்சம் அபராதம் செலுத்தத் தடை கோரியும், நுழைவு வரி செலுத்த அனுமதிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும், நிலுவை வரித்தொகையான 32 லட்சத்து 30 ஆயிரத்தை ஆகஸ்ட் 7ஆம் தேதி செலுத்தியதாகவும், அது அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டதால், தனி நீதிபதியின் உத்தரவு அமல்படுத்தப்பட்டுவிட்டதாகவும், எனவே நடிகர் விஜய்க்கு எதிரான நீதிமன்ற கருத்துகளைத் தீர்ப்பிலிருந்து நீக்க வேண்டும் எனவும் மூத்த வழக்கறிஞர் வாதிட்டார்.

நுழைவு வரி வசூலிப்பதா? வேண்டாமா? என்பது 20 ஆண்டுகளாக இருந்த பிரச்சினை என்றும், சுங்க வரி விவகாரத்தில் மாநில அரசு சட்டம் இயற்ற முடியாது என்பதால், மத்திய அரசுதான் சட்டம் இயற்ற முடியும் என்றும், இறக்குமதி காருக்கு நுழைவு வரி வசூலிக்கத் தடை இருந்ததாலேயே 20 சதவீதம் செலுத்தப்பட்டு, தற்போது 80 சதவீதமும் செலுத்தப்பட்டதாகவும் மூத்த வழக்கறிஞர் தெரிவித்தார்.

நடிகர் விஜய் வழக்கு ஆவணங்களில் தொழிலைக் குறிப்பிடவில்லை எனக் கூறியிருப்பதாகவும், அதைச் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்றும் சுட்டிக்காட்டினார். நடிகர்கள் நுழைவு வரி செலுத்துவதில்லை என்றும், வரி செலுத்துவதைத் தவிர்க்க வழக்கு தொடர்ந்திருப்பதாகக் கூறுவதும், ரசிகர்கள், உண்மையான கதாநாயகர் என நினைக்கும் நிலையில், ரீல் கதாநாயகராக இருக்கக் கூடாது, வரி செலுத்த மறுப்பது சட்டவிரோதம் போன்ற நீதிபதியின் கருத்துகள் தேவையற்றவை என, மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் வாதிட்டார். கடின உழைப்பால் கார் வாங்கப்பட்ட நிலையில், அதை நீதிபதி விமர்சித்திருப்பது தேவையற்றது என்றும் வாதிட்டார்.

சினிமா துறை லட்சக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாகவும், வரி ஏய்ப்பு எண்ணம் ஏதுமில்லை என்றும், மற்றவர்களைப் போல தானும் வழக்குத் தொடர்ந்ததாக, விஜய் தரப்பில் வாதிடப்பட்டது. தன்னை தேச விரோதியாகக் கூறுவது தவறு என்றும், நீதிபதியின் கருத்துகள் வேறு எந்த வழக்கிலும் கூறப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

நீதிபதிகள் கடும் கருத்துகளைத் தெரிவிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதாகவும், சில வழக்குகளில் நீதிமன்றத்தைத் தவறாக வழிநடத்துபவரை ஆய்வு செய்யலாம் என்றும், அவர்களுக்கு எதிராகக் கருத்து தெரிவிக்கலாம் என்றும், ஆனால், இந்த வழக்கில் தேவையில்லை என்றும் வாதிடப்பட்டது. வரி கேட்பது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என்றால், அதை எதிர்த்து வழக்குத் தொடரலாம் என்றும் விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறிப்பிட்ட நீதிபதிகள், கருத்துகளை நீக்கக்கோரி சம்பந்தப்பட்ட நீதிபதியிடம் ஏன் கோரிக்கை வைக்கக்கூடாது எனக் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த விஜய் தரப்பு வழக்கறிஞர், இந்த வழக்கு மட்டும் அல்லாமல் நடிகர்கள் தனுஷ், சூர்யா வழக்கிலும் இதேபோன்று நடிகர்கள் எனப் பொதுப்படையாகக் கருத்து தெரிவிக்கப்பட்டதாகவும், இந்தக் கருத்துகள் தனிப்பட்ட முறையில் புண்படுத்தியுள்ளதுடன், குற்றவாளி போலக் காட்டியுள்ளதாகவும் வேதனை தெரிவிக்கப்பட்டது.

ஒரு லட்சம் அபராதம் செலுத்துவதில் எந்தப் பிரச்சினையுமில்லை என்றும், 2 கோடி ரூபாய் செலுத்தத் தயாராக இருப்பதாகவும், ஆனால், எதிர்மறைக் கருத்தை நீக்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து, வழக்கின் மீதான தீர்ப்பை நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா மற்றும் முகமது ஷபீக் அமர்வு, தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x