இந்தி உங்களின் தாய் மொழி; எங்களுடையது அல்ல: இந்திய தணிக்கையாளர் கழக தலைவருக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்

இந்தி உங்களின் தாய் மொழி; எங்களுடையது அல்ல: இந்திய தணிக்கையாளர் கழக தலைவருக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்

Published on

'இந்திய தணிக்கையாளர் கழக பணிக் கலாச்சாரத்தில் இந்தியை இணைத்துக் கொள்ள வேண்டும்' என்று அதன் தலைவர் ஜம்பு சாரியா கூறியுள்ள கருத்தை அவர் திரும்பப் பெற வேண்டும் என்று மதுரை மக்களவை எம்.பி., சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.

அண்மையில், இந்திய தணிக்கையாளர் கழக தலைவர் ஜம்பு சாரியா "தாய் மொழியான இந்தியின் ஆற்றலை உணர்ந்து அதை இந்திய தணிக்கையாளர் கழகம் தனது பணிக் கலாச்சாரத்தில் இணைத்து மேம்படுத்த வேண்டும்" என்று அக்கழகத்தின் "தி சார்டர்ட் அக்கவுன்டன்ட்" இதழில் எழுதியுள்ளார். அக் கழகத்தின் இணைய தளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

அவருக்கு இது தொடர்பாக கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார் மதுரை மக்களவை எம்.பி., சு.வெங்கடேசன்.

அந்தக் கடிதத்தின் விவரம் வருமாறு:

"ஜம்பு சாரியா உங்கள் கூற்று அதிர்ச்சியை தருகிறது. இந்தியாவில் 1950 மொழிகள் உள்ளன. 32 மொழிகள் 10 லட்சம் பேருக்கு மேலானவர்களின் சொந்த மொழியாக, மேலும் 28 மொழிகள் ஒரு லட்சம் பேருக்கு மேலானவர்களின் சொந்த மொழியாக உள்ளது.

இந்தி எல்லாருக்குமான தாய் மொழி அல்ல. உங்கள் கழகத்தில் உள்ள எல்லா தணிக்கையாளர்களுக்குமான தாய் மொழியும் அல்ல. உங்கள் கழகத்தின் சேவையைப் பயன்படுத்துகிறவர்கள் எல்லாருக்குமானதும் அல்ல.

ஆகவே உங்கள் கூற்று உண்மையும் அல்ல. இந்திய நாட்டின் மொழிப் பன்மைத்துவத்திற்கும் எதிரானது.

மேலும் உங்கள் நிறுவனம் நாடாளுமன்றத்தின் சிறப்பு சட்டம் மூலம் உருவாக்கப்பட்டது. இந்திய அரசியலமைப்பு சட்ட நெறிகளை கடைப்பிடிக்க வேண்டிய கடப்பாடு உடையது. பிராந்திய மொழிகள் என்ற தலைப்பிலான பிரிவுகள் 345, 346 ஐ படித்து பாருங்கள்.

இந்தி பேசாத மாநிலங்கள் மீது அதை திணிக்க முடியாது. மாநில சட்ட மன்றங்கள் ஆங்கிலம் தொடர வேண்டும் என்று சொல்கிற வரை ஒன்றிய அரசுத் துறைகள், அதன் தகவல் தொடர்புகளில் இந்தியைப் பயன்படுத்த முடியாது. இந்திய அரசியல் சாசனம் 8 வது அட்டவணை 22 மொழிகளை அங்கீகரித்து இருக்கிறது என்பதை மறந்து விடக்கூடாது.

ஆகவே உங்கள் கழகமும் சட்டத்திற்கு உட்பட்டு தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளின் பயன்பாட்டை உறுதி செய்ய வேண்டும். சட்டத்திற்கு விரோதமான அணுகுமுறையை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படியே இந்தியை சொந்த மொழியாக கொண்டவர்கள் 39 % பேரே.

ஜம்புசாரியா! இந்தி உங்களின் தாய் மொழியாக இருக்கலாம். அதன் மீது உங்களுக்கு அளவற்ற பற்று இருக்கலாம். எனது தாய் மொழி தமிழ். எனக்கு என் தாய் மொழியின் மீது உள்ள பற்று உங்களை விட அதிகமானது.

எனக்கு மட்டுமல்ல உங்களின் தணிக்கை முடிவுகளை நம்பி பயன்படுத்துகிற ஒவ்வொரு குடி மக்களுக்கும் அவரவர் தாய் மொழி மீது அளவற்ற பற்று உண்டு. உங்கள் கூற்று இந்தி பேசாத பேசாத மாநிலங்களைச் சேர்ந்த கோடிக் கணக்கான மக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவது ஆகும்.

ஆகவே உங்கள் "தாய் மொழி" கருத்து திரும்பப் பெறப்பட வேண்டும். அரசியல் சாசன நெறிகளுக்கு உட்பட்டு உங்கள் கழகத்தின் மொழிப் பயன்பாடு அமைய வேண்டும்.

இவ்வாறு அக்கடிதத்தில் சு.வெங்கடேசன் எம்.பி, தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in