Published : 25 Oct 2021 03:07 AM
Last Updated : 25 Oct 2021 03:07 AM

தமிழகத்தில் முதல்முறையாக டீசல் விலை ரூ.100-ஐ கடந்ததால் சரக்கு லாரி வாடகைக் கட்டணம் 20% உயர்வு: அத்தியாவசியப் பொருட்கள் விலை உயரும் அபாயம்

சென்னை

தமிழகத்தில் முதல்முறையாக டீசல் விலை ரூ.100-ஐக் கடந்துள்ளதால், சரக்கு லாரிகளின் வாடகைக்கட்டணம் 20 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசின் கலால் வரிஉயர்வு, மாநில அரசின் மதிப்புக்கூட்டு வரி அதிகரிப்பு ஆகியவற்றால் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது. கரோனா ஊரடங்கு தளர்வுக்குப் பிறகும் பெட்ரோல், டீசல் மீதான வரி உயர்த்தப்பட்டுள்ளதால் விலை மேலும், உயர்ந்து வருகிறது.

இதனால், டீசல் விலை தமிழகத்தில் முதல்முறையாக ரூ.100.59-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே, லாரி உரிமையாளர்கள் அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை, காய்கறிகள், மணல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டுசெல்லும் சரக்கு லாரிகளின் வாடகைக் கட்டணத்தை 20 சதவீதம் உயர்த்தியுள்ளனர். இதனால், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

20% வாடகை உயர்வு

இது தொடர்பாக அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் எஸ்.யுவராஜ் கூறியதாவது:

கரோனா ஊரடங்கால் ஏற்கெனவே லாரித் தொழில் முடங்கியுள்ளது. இதற்கிடையே, டீசல்விலையும் அதிகரித்து வருகிறது.தற்போது ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.100-ஐக் கடந்துள்ளது.

எங்களுக்கு ஏற்பட்டுள்ள பெரிய நஷ்டத்தை ஈடுசெய்ய முடியாத சூழலில், சரக்கு லாரிகளின் வாடகைக் கட்டணத்தை 20 சதவீதம் உயர்த்தியுள்ளோம்.

மேலும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு ஜிஎஸ்டி-க்குள் கொண்டுவரக்கோரி விரைவில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, "பருப்பு, வெங்காயம், சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் இதர மாநிலங்களில் இருந்துதான் தமிழகத்துக்கு அதிக அளவில் கொண்டு வரப்படுகின்றன. இதற்கிடையே, சரக்கு லாரிகளின் வாடகைக் கட்டண உயர்வால், பொருட்களின் விலை சுமார் 10 சதவீதம் வரை உயரும். இதேபோல, மற்ற வீட்டு உபயோக பொருட்களைக் கொண்டுசெல்லும் கனரக வாகனங்களின் வாடகையும் உயர்வதால், அவற்றின் விலையும் அதிகரிக்கும்" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x