Published : 25 Oct 2021 03:07 AM
Last Updated : 25 Oct 2021 03:07 AM
திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் புதிதாக 7 லட்சம் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன என உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சி மரப்பேட்டை – உடுமலைப்பேட்டை சாலையில், தனியார் நிறுவனம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக நடத்தப்பட்ட பசுமை வாகன பேரணியை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
திமுக தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை முதல்வர் படிப்படியாக நிறைவேற்றி வருகிறார். விவசாயிகளின் நலன் கருதி வேளாண்மைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. விண்ணப்பித்த 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்கப்பட்டு வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் இதுவரை 7 லட்சம் பேருக்கு குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளது. நியாயவிலை கடைகளில் பனை வெல்லம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் அறிவித்த 505 வாக்குறுதிகளில் 202-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நியாய விலை கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்வது குறித்து தென்னை விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். விவசாயிகளின் கோரிக்கை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT