Published : 25 Oct 2021 03:08 AM
Last Updated : 25 Oct 2021 03:08 AM

புரட்டாசி மாதம் நிறைவால் இறைச்சிக் கடைகளில் களைகட்டிய விற்பனை

ஈரோட்டில் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மீன் மார்க்கெட் மற்றும் இறைச்சிக் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். மற்ற நாட்களைவிட, இவ்விரு நாட்களிலும் வியாபாரம் அதிகளவில் நடைபெறும்.

இந்நிலையில் புரட்டாசி மாதம் தொடங்கியதால் பலர் அசைவத்தில் இருந்து சைவத்துக்கு மாறினர். இதனால் மீன், இறைச்சிக் கடைகளில் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி இருந்தது.

இந்நிலையில், புரட்டாசி மாதம் முடிந்து நேற்று முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால், மீன் மற்றும் இறைச்சிக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. ஈரோடு ஸ்டோனி பாலம் அருகேயுள்ள மீன் மார்க்கெட்டில் மீன் விற்பனை களைகட்டியது. வஞ்சிரம் ஒரு கிலோ ரூ.800, ரோகு ரூ.150, கட்லா ரூ.150 மத்திரூ.170, கருஞ்சிலேபி ரூ.100 - 120, சங்கரா ரூ.130, பாறை ரூ.170 என்ற விலைக்கு விற்கப்பட்டது. இதைப்போல் கருங்கல்பாளையம் காவிரி சாலையிலும், மீன் வாங்க அதிக அளவில் பொதுமக்கள் திரண்டனர்.

அதேபோல், ஆடு மற்றும் கோழி இறைச்சிக்கடைகளிலும் அசைவப் பிரியர்களின் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. ஒரு கிலோ ஆட்டு இறைச்சி ரூ.700, பிராய்லர் கோழி ரூ.200, நாட்டுக்கோழி 400 - க்கு விற்கப்பட்டது. இதேபோல் கோபி, பெருந்துறை, அந்தியூர், சத்தியமங்கலம், மொடக்குறிச்சி, கொடுமுடி, பவானி என மாவட்டம் முழுவதும் நேற்று மீன் மற்றும் இறைச்சி விற்பனை களைகட்டிக் காணப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x