

கொடைக்கானல் மலைப்பகுதியில் தொடர் மழை காரணமாக அடுக்கம் மலைச் சாலையில் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டதால் மலைகிராமங்கள் போக்குவரத்து இன்றி துண்டிக்கப்பட்டன.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது, நேற்று இரவு முதல் இன்று காலை வரை கொடைக்கானல் மலைப்பகுதிகளில் 48.7 மி.மீ., மழை பதிவானது.
தொடர்மழை காரணமாக கொடைக்கானலில் இருந்து அடுக்கம், கும்பக்கரை வழியாக பெரியகுளம் பகுதிக்குச் செல்லும் பிரதான மலைச் சாலையில் ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டது.
இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அடுக்கம், பாலமலை உள்ளிட்ட மலைகிராமங்களில் வசிக்கும் பொதுமக்களும் சிரமத்திற்குள்ளாகினர்.
ஒரு சில இடங்களில் சாலைகள் மண்சகதியினாலும், பாறைகள், மரங்கள் விழுந்து மூடியுள்ளன. இதனால் நடந்துகூட சாலையை கடந்து செல்லமுடியாதநிலை ஏற்பட்டது. இதனால் மலைகிராமமக்கள் கிராமங்களிலேயே முடங்கினர்.
மண்சரிவு ஏற்பட்டுள்ள இடங்களில் நெடுஞ்சாலைதுறையினர் சீரமைப்பு பணிகளை நேற்று காலை துவங்கி தொடர்ந்து மேற்கொண்டுவருகின்றனர். நேற்று மாலை வரை தொடர்ந்து பணிகள் நடைபெற்றது. சாலை முற்றிலும் சீரமைக்கப்பட்டு நாளை முதல் போக்குவரத்து இயல்புநிலைக்கு திரும்பும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.