

பண்ருட்டி அருகே உள்ள பனிக்கன்குப்பத்தில் திமுகவைச் சேர்ந்த கடலூர் மக்களவை உறுப்பினர் டி.ஆர்.வி.எஸ்.ரமேஷூக்கு சொந்தமான முந்திரி ஆலை அமைந்துள்ளது. இங்கு வேலை பார்த்து வந்த மேல்மாம்பட்டைச் சேர்ந்த கோவிந்தராஜ் கடந்த செப்.19-ம் தேதி இரவு மர்மமான முறையில் உயிரிழந்தார்.
வழக்கை விசாரித்த சிபிசிஐடி போலீஸார், இதை கொலை வழக்காக பதிவு செய்து, கடந்த 9-ம் தேதியன்று எம்பி ரமேஷ் உட்பட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்து, ரமேஷின் உதவியாளர் நடராஜன் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர். கடந்த 11-ம் தேதி பண்ருட்டி சார்பு நீதிமன்றத்தில் ரமேஷ் சரணடைந்தார்.
வழக்கில் கைது செய்யப்பட்ட நடராஜன், அல்லாபிச்சை, கந்தவேல், வினோத், சுந்தர்ராஜன் ஆகிய 5 பேரும் கடலூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர் படுத்தப்பட்டனர். 5 பேரிடமும் 2 நாள் விசாரணை நடத்த அனுமதி கோரி சிபிசிஐடி போலீஸார் மனுத்தாக்கல் செய்தனர். எனினும், அவர்களிடம் ஒருநாள் விசாரணை நடத்த நீதிபதி பிரபாகர் உத்தரவிட்டார். பின்னர் 5 பேரும் கடலூர் சிபிசிஐடி அலுவலகத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இதற்கிடையே ரமேஷ் எம்பி தரப்பில் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனு கடலூர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் 2-வது நாளாக நீதிபதி ஜவஹர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
ரமேஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சிவராஜ், ‘எம்பியாக உள்ள ரமேஷ் இதுபோன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபட மாட்டார். அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் அவர் மீது இந்த கொலைவழக்குப்பதிவு செய்யப்பட்டுஉள்ளது. வழக்கில் தொடர்புடையதாக எந்த ஆதாரமும் இல்லை. அவரை ஜாமீனில் விட வேண்டும்’ என்றார். அரசு தரப்பு வழக்கறிஞர் சந்திரசேகரன், ‘இந்த வழக்கு தொடர்பாக 43 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவரை ஜாமீனில் விட்டால் விசாரணை பாதிக்கும்’ என்றார். அதேபோல் கொலை செய்யப்பட்டகோவிந்த ராஜ் மகன் செந்தில்வேல் தரப்பு வழக்கறிஞர்களும் ஜாமீன்வழங்க கூடாது என்று முறையிட்டனர். இதையடுத்து, ஜாமீன் மனுவைநீதிபதி தள்ளுபடி செய்தார்.