Published : 24 Oct 2021 03:07 AM
Last Updated : 24 Oct 2021 03:07 AM

பராமரிப்பு பணிகளால் தாம்பரம் தடத்தில் 14 மின்சார ரயில்கள் ரத்து

சென்னை

தண்டவாள பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளதால் சென்னை கடற்கரை - தாம்பரம் தடத்தில் அக்.24 (இன்று), 31, மற்றும் நவ.7-ம் தேதிகளில் 14 மின்சார ரயில்களின் சேவைமுழுவதுமாகவும், 11 ரயில்களின் சேவையில் ஒரு பகுதியும் ரத்துசெய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கோடம்பாக்கம் - தாம்பரம் இடையே 24, 31 மற்றும் நவம்பர் 7-ம் தேதிகளில் (ஞாயிறுகளில்) காலை 11.40 மணி முதல் மாலை 3.40 மணி வரையில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. இதனால், மேற்கண்ட நேரங்களில் சென்னை கடற்கரை - தாம்பரம் தடத்தில் மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகிறது.

அதன்படி, சென்னை கடற்கரை - தாம்பரம் இடையிலான காலை 11, 11.30, 11.45, மதியம் 12.20, 12.40, 1.40, 2.30மணி ரயில்களின் சேவை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதேபோல், தாம்பரம் - சென்னை கடற்கரை காலை 11.30, மதியம் 12.10, 12.30, 1.50, 2.50, மாலை 3.30 மணி மற்றும் திருமால்பூர் - சென்னை கடற்கரை மதியம் 10.40 மணி ரயில்களின் சேவையும் ரத்து செய்யப்படுகின்றன.

இருப்பினும், பயணிகளின் வசதிகாக திருமால்பூரில் இருந்து சென்னை கடற்கரைக்கு மேற்கண்ட நாட்களில் மதியம் 1.50 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்.

சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டுக்கு காலை 11.15, மதியம் 12, 1.20, 2, 3 மணிக்கு செல்ல வேண்டிய ரயில்களும், அரக்கோணம் செல்ல வேண்டிய மதியம் 1 மணி ரயிலும் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும். இதேபோல், செங்கல்பட்டு - சென்னை கடற்கரை காலை 10.15, 11, மதியம் 12.25, 1.25, 2.15 மணி மின்சார ரயில்களின் சேவையில் ஒரு பகுதி ரத்து செய்யப்பட்டு தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x