Published : 24 Oct 2021 03:07 AM
Last Updated : 24 Oct 2021 03:07 AM

தமிழக அரசின் போனஸ் அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறது: தொழிற்சங்க நிர்வாகிகள் அதிருப்தி

சென்னை

பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள போனஸ் ஏமாற்றம் அளிப்பதாக தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளன.

தமிழக அரசின் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 10 சதவீதம் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கைகளில் கூறியிருப்பதாவது:

சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராஜன்: மாநிலப் பொதுத்துறை நிறுவனத் தொழிலாளர்கள் கரோனா தொற்றையும் பாராமல், அரசின் செயல்பாடுகளுக்கு துணை நின்று, சிறப்பாகப் பணியாற்றி வருகின்றனர்.

2020-21-ம் ஆண்டுக்கான போனஸ் கோரிக்கைகளை அந்தந்த நிர்வாகங்களிடம் தொழிற்சங்கங்கள் அளித்து, பேச்சுவார்த்தை நடத்தி, போனஸ் அறிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தைக்கு தயாராக இருந்த நிலையில் முதல்வரின் இந்த அறிவிப்பு தொழிலாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அரசின் இத்தகைய அணுகுமுறை, முந்தைய அதிமுக ஆட்சியின் அணுகுமுறையைப் பின்பற்றுவதாக உள்ளது. எனவே, தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, போனஸ் பிரச்சினைக்குத் தீர்வுகாண முதல்வர் முன்வர வேண்டும்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் சம்மேளனப் (ஏஐடியுசி) பொதுச் செயலாளர் ஆர்.ஆறுமுகம்: போக்குவரத்து ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 25 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தோம்.

தொழிற்சங்கங்களை நேரடியாக அழைத்துப் பேசியிருந்தால், அதற்கான வாய்ப்பு உருவாகி இருக்கும். தற்போது தமிழக அரசு அறிவித்துள்ள போனஸ் அறிவிப்பு தொழிலாளர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

டாஸ்மாக் ஊழியர் மாநிலசம்மேளனப் பொதுச் செயலாளர் திருச்செல்வன்: அரசின் மற்றபொதுத்துறை நிறுவனங்களைக் காட்டிலும் அதிக வருவாய் ஈட்டிதரும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு20 சதவீதம் போனஸ், 20 சதவீதம் கருணைத்தொகை வழங்கவேண்டுமென கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டு, நிர்வாகத் தரப்பில் பேச்சுவார்த்தைக்கான எந்தவித முயற்சியும் எடுக்காத நிலையில், முதல்வரின் தன்னிச்சையான 10 சதவீத போனஸ் அறிவிப்பு ஊழியர்கள் மத்தியில் பெருத்த ஏமாற்றத்தையே அளித்துள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x