Published : 24 Oct 2021 03:07 AM
Last Updated : 24 Oct 2021 03:07 AM

‘வங்கிகளின் சங்கமம்’ கடன் வழங்கும் விழா; 3,075 பயனாளிகளுக்கு ரூ.194 கோடி மதிப்பில் கடன்: திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்

திருவள்ளூர்

‘வங்கிகளின் சங்கமம்’ என்ற கடன் வழங்கும் விழாவில், 3,075 பயனாளிகளுக்கு ரூ.194 கோடி மதிப்பீட்டிலான கடனுதவிகள் வழங்கப்பட்டன.

திருவள்ளூரில் ‘வங்கிகளின் சங்கமம்’ என்ற வாடிக்கையாளர் சந்திப்பு மற்றும் கடன் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பிஜான் வர்கீஸ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, தொழிற்கடன்,வீட்டு வசதிக் கடன், வாகனக் கடன்,கல்விக் கடன், தனிநபர் கடன் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுகடன் உள்ளிட்ட பல்வேறு கடன்கள் மூலம் 3,075 பயனாளிகளுக்கு ரூ.194 கோடி மதிப்பீட்டிலான கடனுதவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய ஆட்சியர், “கரோனா தொற்றின் தாக்கத்தால் தடுமாறிய பொருளாதார வளர்ச்சியை மீண்டும் நிலை நிறுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும், வங்கிகளும் இதுபோன்ற முகாம்களை ஏற்படுத்தி, தகுதியுள்ள அனைவருக்கும் வங்கிக் கடன்கள் சென்று சேரும் வகையில் பல்வேறு திட்டங்களை ஏற்பாடு செய்து வருகின்றன.

‘பிரதம மந்திரி ஸ்வாநிதி’ என்ற நடைபாதை வியாபாரிகளுக்கான சிறு கடன்கள். 315 பேருக்கு வழங்கப்பட்டுள்ளன. இக்கடனுக்கு அனைத்து வங்கிகளும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பொதுமக்கள் எளிய முறையில் கடன் பெறுவதற்கான வழிமுறைகளை ஏற்படுத்தித் தர வங்கிகள் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

விவசாயம், கல்வி, குறு, சிறு,நடுத்தர தொழில்களுக்கு கடன் கொடுப்பதில் வருங்காலத்தில் எளிய முறையில் கிடைக்க செய்யஅனைத்து வங்கிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

இந்நிகழ்ச்சியில், மகளிர் திட்ட இயக்குநர் மல்லிகா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் டி.ஏ.சீனிவாசன், மாவட்ட தொழில்மையம் பொதுமேலாளர் வி.மணிவண்ணன், இந்தியன் வங்கிதலைமை அலுவலக பொதுமேலாளர் சூரிபாபு, மண்டல மேலாளர் மோகன்தாஸ் மற்றும் பல்வேறு வங்கிகளின் அதிகாரிகள், அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x