

ஐந்தாம் வகுப்பு 2-ம் பருவ சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் கீழடி குறித்த தகவல் இடம்பெற்றுள்ளது. இதில் இந்திய தொல்லியல் துறை நடத்திய அகழாய்வு பற்றி மட்டுமே குறிப்பிட்டுள்ளதாகவும், தமிழக தொல்லியல் துறை நடத்திய அகழாய்வு பற்றிய தகவல் இடம்பெறாதது ஏன் என்று தொல்லியல் ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் 7 கட்டங்களாக அகழாய்வுப் பணி நடந்தது. இதில் முதல் 3 கட்ட அகழாய்வுகளை இந்திய தொல்லியல் துறையும், மற்ற நான்கு கட்ட அகழாய்வுகளை தமிழக தொல் லியல் துறையும் மேற்கொண்டன.
இந்நிலையில் நவ.1-ம் தேதி முதல் ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதையடுத்து தமிழக பள்ளி கல்வித் துறை சார்பில் மாணவர்களுக்கு 2-ம் பருவப் பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு வரு கின்றன.
ஐந்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் பண்டைய அகழ்வாராய்ச்சி என்ற தலைப்பில் கீழடி பெருமை குறித்த தகவல் இடம்பெற்றுள்ளது. இதில், கீழடி கிராமத்தில் சங்க காலத்தை சேர்ந்த பழமையான நகரம் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அதில் செங்கற்களால் கட்டப்பட்ட கட்டிடங்கள், நன்கு அமைக்கப்பட்ட வடிகால் அமைப்பு, தமிழ்-பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட மண்பாண்டங்கள், கண்ணாடி மணிகள், செம்மணிகள், வெண்கல் படிவம், முத்துகள், தங்க ஆபரணங்கள், இரும்பு பொருட்கள், சங்கு வளையல்கள், தந்தத்தால் செய்யப்பட்ட பகடை, ரோம் நாட்டைச் சேர்ந்த பழங்காலத் தொல்பொருட்கள் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக் கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கும் ரோம் நாட்டுக்கும் வணிக தொடர்பு இருந்ததாகவும் குறிப்பிடப் பட்டுள்ளது.
இதனிடையே, இந்த பாடப்புத்தக்கத்தில் இந்தியத் தொல்லியல் துறை ஆய்வு செய்தது தொடர்பான தகவல் மட்டுமே இடம்பெற்றுள்ளது. தமிழக தொல்லியல் துறை நடத்திய அகழாய்வு குறித்த தகவல் இடம்பெறாதது ஏன் என்று தொல்லியல் ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.