Last Updated : 23 Oct, 2021 07:02 PM

 

Published : 23 Oct 2021 07:02 PM
Last Updated : 23 Oct 2021 07:02 PM

தனியார் பள்ளி வேன் மோதிய விபத்தில் விவசாயி உயிரிழப்பு: உடலை எடுக்க எதிர்ப்பு தெரிவித்து உறவினர்கள் சாலை மறியல்

விபத்தில் இறந்தவரின் உடலை எடுக்க எதிர்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே பள்ளி வேன் மோதி விவசாயி உயிரிழந்த சம்பவத்தில் உடலை எடுக்க எதிர்ப்பு தெரிவித்து உறவினர்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

உடையார்பாளையம் அருகேயுள்ள தத்தனூர்மேலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி தங்கராசு (60). இவர், தனது மகள் வீட்டு பேரனை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, அவ்வழியே வந்த தனியார் பள்ளி வேன் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், தங்கராசு அதேயிடத்தில் உயிரிழந்தார். காயமடைந்த பேரன் ரஞ்சித் (14) ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில், திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சர்வீஸ் சாலை அமைக்காததால் அடிக்கடி இப்பகுதியில் விபத்து ஏற்படுகிறது. எனவே, சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும், இறந்தவரின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, இறந்தவரின் சடலத்தை எடுக்க எதிர்ப்பு தெரிவித்து உறவினர்கள், கிராம மக்கள் இன்று (அக். 23) சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த உடையார்பாளையம் போலீஸார் மற்றும் ஜெயங்கொண்டம் தாசில்தார் ஆனந்தன் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

இதையடுத்து, தங்கராசுவின் உடலை ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x