Published : 23 Oct 2021 02:59 PM
Last Updated : 23 Oct 2021 02:59 PM

தேசிய மருந்தியல் கழகத்தை மதுரையில் தொடங்கும் பணியைத் தீவிரப்படுத்துக: சு.வெங்கடேசன் வலியுறுத்தல்

மதுரை

தேசிய மருந்தியல் கழகத்தை மதுரையில் தொடங்கும் பணியைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று துறைச் செயலாளர்களிடம் சு.வெங்கடேசன் எம்.பி. நேரில் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

’’தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆய்வுக் கழகத்தை (NIPER) மதுரையில் அமைப்பது தொடர்பான கடிதங்களை வழங்கி, திட்டத்தைத் தொடங்குவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்தும், விரைந்து தொடங்க வேண்டிய தேவை குறித்தும் உரம் மற்றும் ரசாயனத்துறைச் செயலாளர் அபர்னாவையும், நிதித்துறைச் செயலாளர் (செலவினம்) டி.வி.சோமநாதனையும் சந்தித்துப் பேசினேன்.

தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகத்திற்காக மதுரையில் 2012ஆம் ஆண்டு தரப்பட்ட நூறு ஏக்கர் நிலமானது முன் நுழைவு அனுமதிக்கான சான்று மட்டுமே தரப்பட்டுள்ளது. அதன் பிறகு அந்நிலமானது கழகத்தின் பெயரில் பெயர் மாற்றம் செய்யப்படாமலே இருக்கிறது. அதற்கான விண்ணப்பமும் மருந்தியல் கழகம் சார்பில் தரப்படவில்லை.

இது தேவையற்ற பிரச்சினையைப் பிற்காலத்தில் உருவாக்கும். குறிப்பாக மதுரை எய்ம்ஸ் போல, நிலத்துக்கான பெயர் மாற்றம் மற்றும் ஒப்படைத்தல் என்பதே பெரும் கால விரயத்தை உருவாக்கும் நிலையும் ஏற்படலாம். சில நேரம் பிற வேலைகளுக்காக நிலம் பயன்படுத்தப்பட்டுவிடும் ஆபத்தும் உண்டு.

எனவே நிலத்தை தேசிய மருந்தியல் கல்விக் கழகத்தின் பெயரில் மாற்றித்தர உரிய விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு துறைச் செயலாளரிடம் வலியுறுத்தினேன். மதுரை மாவட்ட வருவாய்த்துறை அதிகாரியிடமிருந்து பெற்று வந்த அதற்குரிய விண்ணப்பத்தையும் மத்திய அரசின் செயலாளர் வசம் ஒப்படைத்தேன். விரைவில் இதற்கான நடவடிக்கைகள் தீவிரமடையும் என்று நம்புகிறேன்’’.

இவ்வாறு சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x