Last Updated : 23 Oct, 2021 09:39 AM

 

Published : 23 Oct 2021 09:39 AM
Last Updated : 23 Oct 2021 09:39 AM

இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட தமிழக மீனவர்: சடலத்தைப் பெற சர்வதேச எல்லைக்குப் புறப்பட்ட 11 பேர் குழு

கொல்லப்பட்ட மீனவர் ராஜ்கிரண் | கோப்புப் படம்.

புதுக்கோட்டை

இலங்கை கடற்படையால் மூழ்கடித்துக் கொல்லப்பட்ட மீனவரின் சடலத்தைப் பெறுவதற்காக புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து சர்வதேச எல்லைக்கு 2 விசைப்படகுகளில் அலுவலர்கள், மீனவர்கள் என 11 பேர் கொண்ட குழுவினர் இன்று (அக்.23) புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து ராஜ் மகன் ராஜ்கிரண் (30), சுதாகர் மகன் சுகந்தன் (30), அருளானந்தன் மகன் சேவியர் (32) ஆகிய 3 பேரும் ஒரு படகில் சுமார் 17 நாட்டிக்கல் மைல் தொலைவில் அக்டோபர் 19-ம் தேதி மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர்.

அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி தங்களது ரோந்துக் கப்பல் மூலம் மீனவர்களின் படகை இடித்ததில் படகு பழுதாகி நடுக்கடலில் மூழ்கியது. இதையடுத்து, சுகந்தன் மற்றும் சேவியர் ஆகிய 2 பேரை இலங்கை கடற்படையினர் மீட்டனர். இரண்டு நாட்கள் தேடலுக்குப் பிறகு ராஜ்கிரண் சடலமாக மீட்கப்பட்டார்.

இலங்கை கடற்படையினரின் இத்தகைய செயலைக் கண்டித்தும், இறந்த மீனவர் ராஜ்கிரணின் சடலம் மற்றும் சிறைப் பிடிக்கப்பட்டுள்ள 2 மீனவர்களையும் உடனே ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி கோட்டைப்பட்டினத்தில் மீனவர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் ராஜ்கிரணின் மனைவி பிருந்தா (25), தாய் ஆரவள்ளி உட்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், மீனவரின் சடலமானது அலுவலர்கள் கூறியபடி நேற்று கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவ்வாறு கிடைக்கவில்லை. இதனால் விரக்தி அடைந்த மீனவர்கள் நேற்று கடலில் இறங்கிப் போராட முயன்றனர். இவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி வெளியேற்றினர். அதன்பிறகு, கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து 2 அலுவலர்கள், 9 மீனவர்கள் என 11 பேர் கொண்ட குழு மீனவர்களுக்குச் சொந்தமான 2 விசைப்படகுகளில் இன்று அதிகாலை சுமார் 5 மணிக்கு சர்வதேச எல்லைக்குப் புறப்பட்டுச் சென்றது.

அங்கு, இலங்கை கடற்படையினர் ஒப்படைக்கும் சடலத்தை இந்தியக் கடற்படை வழியாக இக்குழுவினர் பெற்றுக்கொண்டு கரை திரும்புவர். பகல் சுமார் 2 மணிக்கு இக்குழு கரை திரும்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மீனவரின் உடலுக்குத் தமிழக அரசின் சார்பில் யாரேனும் கலந்துகொண்டு மரியாதை செலுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, கோட்டைப்பட்டினம் பகுதியில் கூடுதல் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x