Published : 22 Oct 2021 06:41 PM
Last Updated : 22 Oct 2021 06:41 PM

உயிரிழந்த மீனவர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவி: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

புதுக்கோட்டை மாவட்ட மீனவர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (அக். 22) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 18.10.2021 அன்று IND-TN-08-MM-201 என்ற பதிவெண் கொண்ட விசைப்படகில் மூன்று மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர் என்றும், அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது இலங்கை கடற்படையினரால் விரட்டியடிக்கப்பட்டதாகவும், மீனவர்கள் சென்ற விசைப்படகு கடலில் மூழ்கியதாகவும் தெரியவந்ததையடுத்து, அவர்களை மீட்டுத் தருமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்குக் கடிதம் எழுதியிருந்தார்.

மேற்படி மூன்று மீனவர்களில் சுகந்தன் (வயது 22), சேவியர் (வயது 38) ஆகிய இரு மீனவர்கள் இலங்கையின் கடற்படை வசம் இருந்த நிலையில், மற்றொரு மீனவரான ராஜ்கிரண் (வயது 28) என்பவர் இறந்த நிலையில், அவரது உடல் கண்டெடுக்கப்பட்டதாகவும் தகவல் வரப்பெற்றுள்ளது.

இந்நிகழ்வில் உயிரிழந்த மீனவர் ராஜ்கிரண் என்பவரது குடும்பத்தாருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, அவரது குடும்பத்தாருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.10 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்".

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x