Published : 22 Oct 2021 06:34 PM
Last Updated : 22 Oct 2021 06:34 PM

பார்வையற்றவர்களுக்கு மறு தேர்வு நடத்தக் கோரிய மனு: தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்

சென்னை

உயர் நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளர்கள் பணிக்கு விண்ணப்பித்த கண் பார்வையற்றவர்களுக்கு மறு தேர்வு நடத்தக் கோரிய மனுவுக்கு, ஒரு வாரத்தில் பதிலளிக்க உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் மற்றும் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் கண் பார்வையற்ற விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு எழுத உதவியாளர்கள் நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை மத்திய அரசு, கடந்த 2013-ம் ஆண்டு அறிவித்துள்ளது.

ஆனால், சென்னை உயர் நீதிமன்ற அலுவலக உதவியாளர்கள் பணியிடங்களுக்கான தேர்வில் கண் பார்வையற்ற விண்ணப்பதாரர்களுக்கு உதவியாளர்கள் நியமிக்கப்படவில்லை என்பதால், அவர்களுக்கு மறு தேர்வு நடத்த உத்தரவிடக் கோரி, கண் பார்வையற்ற மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (அக். 22) விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தக்கூடிய தேர்வுகளில், கண் பார்வையற்ற விண்ணப்பதாரர்களுக்கு உதவியாளர்கள் நியமிக்கப்படுவதாகவும், உயர் நீதிமன்றப் பணிக்கு கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி நடந்த தேர்வில் உதவியாளர்கள் நியமிக்கப்படவில்லை எனவும், மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து, மனுவுக்கு அடுத்த வாரம் பதிலளிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் மற்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையைத் தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x