Published : 22 Oct 2021 06:29 PM
Last Updated : 22 Oct 2021 06:29 PM

பருவ மழையை எதிர்கொள்ள மின்சார வாரியம் தயார்: அமைச்சர் செந்தில்பாலாஜி

பருவமழைக் காலத்தை எதிர்கொள்ள மின்சார வாரியம் பல்வேறு முன்னேற்பாடுகளைச் செய்துள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைமையகத்தில் செயல்பட்டு வரும் 24 மணி நேர மின் நுகர்வோர் சேவை மையமான மின்னகத்தில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று (22.10.2021) ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''தமிழ்நாடு முதல்வர் கடந்த 20.06.2021 அன்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைமையகத்தில் தமிழ்நாட்டு மக்களுக்குச் சிறப்பான மின் சேவையை வழங்குவதற்காக 24 மணி நேரமும் செயல்படக்கூடிய மின் நுகர்வோர் சேவை மையமான மின்னகத்தைத் தொடங்கி வைத்தார். மின்னகம் தொடங்கப்பட்ட 20.06.2021 முதல் 21.10.2021 வரை 4,14,152 புகார்கள் பெறப்பட்டு அதில் 4,06,846 புகார்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. மின்னகத்தில் மின் நுகர்வோர்களால் பெறப்பட்ட 98% புகார்களுக்கு இதுவரை தீர்வு காணப்பட்டுள்ளது.

இதுவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த ஐந்து மாதங்களில் தமிழ்நாட்டில் 25,292 மின் கம்பங்கள் மாற்றப்பட்டுள்ளன. தாழ்வான நிலையிலிருந்த மின் கம்பிகள் 48,279 இடங்களில் சரி செய்யப்பட்டுள்ளன. 700 மின் பெட்டிகள் (பில்லர் பாக்ஸ்) உயர்த்தப்பட்டுள்ளன. மேலும் 7,000 சாய்ந்த மின் கம்பங்கள் சரி செய்யப்பட்டுள்ளன. 13,500 பழுதடைந்த பீங்கான், இன்சுலேட்டர்கள் சரிசெய்யப்பட்டிருக்கின்றன.

அதேபோல் பழுதடைந்த நிலையில் இருந்த 1,400 மின் பெட்டிகள் மாற்றப்பட்டிருக்கின்றன. முதல்வர் தொடங்கி வைத்த புதியதாக 8,905 புதிய மின்மாற்றிகள் அமைக்கும் பணியில் இதுவரை 3,337 புதிய மின்மாற்றிகள் நிறுவப்பட்டுள்ளன. இதுபோன்று பல்வேறு நடவடிக்கைகளை மின்சார வாரியம் எடுத்து வருகிறது. மின்னகத்தில் மீதம் உள்ள 2 சதவிகிதப் புகார்களுக்கு விரைந்து துறைவாரியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

பருவமழைக் காலத்தை எதிர்கொள்ள மின்சார வாரியம் பல்வேறு முன்னேற்பாடுகளைச் செய்துள்ளது. குறிப்பாக 93,881 மின் கம்பங்கள், 19,826 கி.மீ. மின் கம்பிகள், 4,600 மின்மாற்றிகள், 15,600 கி.மீ. தாழ்வழுத்தப் புதைவடங்கள், 50 கி.மீ. அளவிற்கு உயரழுத்தப் புதைவடங்கள் தற்போது தயார் நிலையில் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் வாரியத்தின் நிறுவுதிறன் 4,320 மெகாவாட் ஆகும். இதில் கடந்த கால ஆட்சியில் 1,800 மெகாவாட் அளவுதான் உற்பத்தி செய்தார்கள்.

தற்போது முதல்வரின் மேலான அறிவுரைகளைப் பின்பற்றி, சொந்த உற்பத்தி தற்போது 3,500 மெகாவாட் அளவிற்கு உயர்ந்துள்ளது. கன்னியாகுமரியில் மழையினால் பாதிக்கப்பட்ட 101 மின்மாற்றிகளில் 14 மின்மாற்றிகள் பழுதடைந்தன. அவற்றைச் சரிசெய்ய மதுரை மற்றும் திண்டுக்கல்லிலிருந்து மின் மாற்றிகள் கொண்டுவரப்பட்டு அனைத்தும் சரி செய்யப்பட்டுவிட்டன''.

இவ்வாறு அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x