

இந்திய - இலங்கை இரு நாட்டு மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண ஐந்தாவது கட்ட இறுதி பேச்சுவார்த்தைக்கு இரு நாட்டு அரசுகளும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று புதுவை தேசிய மீனவர் பேரவை மத்திய அமைச்சர்களிடம் வலியுறுத்தியுள்ளது.
தேசிய மீனவர் பேரவை தலைவர், முன்னாள் எம்எல்ஏ இளங்கோ டெல்லியில் மத்திய மீன்வளத்துறை அமைச்சர் புருஷோத்தம் ரூபலா, இணை அமைச்சர் முருகன், வெளியுறவுத்துறை அதிகாரிகளை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பு குறித்து இளங்கோ கூறியதாவது:
" இந்தியா- இலங்கை கடல்பகுதியில் தமிழக, புதுவை மீனவர்கள் பாரம்பரிய கடல் பகுதியில் மீன்பிடிப்பது தொடர்பான பிரச்சினையில் 4 முறை இருதரப்பு பேச்சுவார்த்தை சென்னை, கொழும்பு, டெல்லியில் நடந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நாகப்பட்டினத்தை சேர்ந்த 2 படகுகளையும், 23 மீனவர்களையும் இலங்கை கடற்கரை பிடித்துள்ளது. கடலில் வழி தவறிச்சென்ற அவர்கள் மீதான வழக்கை ரத்து செய்து விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர்களிடம் கோரிக்கை வைத்துள்ளேன்.
இருநாட்டு மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண 5வது கட்ட இறுதி பேச்சுவார்த்தைக்கு இரு நாட்டு அரசுகம் ஏற்பாடு செய்ய வேண்டும். இதில் சுமூக முடிவு எடுக்க மத்திய அரசும், பிரதமரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளேன். தேசிய மீனவர் பேரவையின் கோரிக்கைகள் அடங்கிய கடிதம் பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருக்கு சமர்பிக்கப்பட்டுள்ளது". இவ்வாறு அவர் தெரிவித்தார்.