Published : 22 Oct 2021 12:53 PM
Last Updated : 22 Oct 2021 12:53 PM

மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான 14% அகவிலைப்படியை உடனே வழங்குக: ஓபிஎஸ்

மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான 14 விழுக்காடு அகவிலைப்படியை தீபாவளிப் பரிசாக உடனே வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட வேண்டும் என, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ஓபிஎஸ் இன்று (அக். 22) வெளியிட்ட அறிக்கை:

"அரசால் தீட்டப்படும் திட்டங்களைச் செயல்படுத்துவதிலும், அரசின் நலத்திட்ட உதவிகளை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்ப்பதிலும், இயற்கை பேரிடர்களின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான மீட்பு, நிவாரணம் மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும், அரசின் வளர்ச்சி நோக்கங்களை எய்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும் பொதுச் சேவையை நடைமுறைப்படுத்துவதிலும் அடித்தளமாக விளங்குபவர்கள் அரசு ஊழியர்கள்.

இதேபோன்று, நம் நாட்டு மக்கள் அனைவரும் கண்ணுடையவர்களாக விளங்கினால்தான் நம் நாடு முன்னேற்றம் அடையும் என்பதன் அடிப்படையில், அழியாச் செல்வமாம் கல்விச் செல்வத்தை மாணவ மாணவிகளுக்கு போதித்து, அவர்களை நல்லவர்களாகவும், வல்லவர்களாகவும் ஆக்கும் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் ஆசிரியர்கள்.

இப்படிப்பட்ட இன்றியமையாப் பணிகளை மேற்கொள்ளும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்ததால் தான், மத்திய அரசு தனது ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் எப்பொழுதெல்லாம் அகவிலைப்படியை அறிவிக்கின்றதோ அப்பொழுதெல்லாம் அதனை மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கும் அளித்த அரசு அதிமுக அரசு.

இது மட்டுமல்லாமல், 15,000 கோடி ரூபாய் செலவில் ஊதியக் குழு பரிந்துரைப்படி, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஊதியத்தையும் உயர்த்திய அரசு அதிமுக அரசு.

சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் 2011 முதல் 2021 வரையிலான அதிமுக ஆட்சியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி ரொக்கமாக வழங்கப்பட்டு வந்தது.

2021 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின் திமுக ஆட்சி அமைந்ததிலிருந்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நிலைமை பரிதாபத்துக்குள்ளாகியது. ஏற்கெனவே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 11 விழுக்காடு அகவிலைப்படியை மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு 1.7.2021 முதல் அளித்தபோது, அதனை மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விரிவுபடுத்தாமல், 1-4-2022 முதல் வழங்கப்படும் என்று திமுக அரசு அறிவித்தது.

பின்னர், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் தொடர் வலியுறுத்தலைத் தொடர்ந்து, மூன்று மாதங்கள் முன்னதாக, அதாவது 1-1-2022 முதல் வழங்கப்படும் என்று திமுக அரசு அறிவித்தது.

இந்தச் சூழ்நிலையில், தீபாவளி பரிசாக, மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு 1-07-2021 முதல் மேலும் 3 விழுக்காடு அகவிலைப்படியை உயர்த்தி வழங்கியுள்ளது. அதாவது, 1.07.2021 முதல் 31 விழுக்காடு அகவிலைப்படியை மத்திய அரசு ஊழியர்கள் பெறப்போகிறார்கள்.

ஆனால், மாநில அரசு ஊழியர்கள் 17 விழுக்காடு அகவிலைப்படியைத் தான் பெற்று வருகிறார்கள், மத்திய அரசு ஊழியர்களுக்கும், தமிழக அரசு ஊழியர்களுக்குமான அகவிலைப்படி வித்தியாசம் 14 விழுக்காடு. இந்த 14 விழுக்காடு அகவிலைப்படியை தீபாவளி பரிசாக தமிழக அரசு வழங்க வேண்டும் என்பதே அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

தேர்தலுக்கு முன், பழையை ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, தேர்தலுக்குப் பின், விலைவாசி உயர்வை ஓரளவு ஈடுகட்ட வழங்கப்படும் அகவிலைப்படியையே நிறுத்தி வைப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல.

எனவே, மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு தீபாவளிப் பரிசாக அகவிலைப்படியை அளித்ததுபோல், மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான 14 விழுக்காடு அகவிலைப்படியை தீபாவளிப் பரிசாக உடனே வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்".

இவ்வாறு ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x