

சென்னை அரசுப் பொது மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ள அம்மா முழு உடல் பரிசோதனைக்கு தினமும் 100 பேர் வருகின்றனர்.
ஏழை, எளிய மக்கள் குறைந்த செலவில் முழு உடல் பரிசோதனை செய்து கொள்வதற்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் ரூ.10 கோடி செலவில் ‘அம்மா முழு உடல் பரிசோதனை திட்டம்’ மற்றும் ‘அம்மா மகளிர் முழு உடல் பரிசோதனை திட்டம்’ ஆகிய திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா கடந்த 1-ம் தேதி தொடங்கி வைத்தார். ‘அம்மா கோல்டு’ பரிசோதனைக்கு ரூ.1,000, ‘அம்மா டைமண்ட்’ பரிசோதனை ரூ.2,000, ‘அம்மா பிளாட்டினம்’ பரிசோதனை ரூ.3,000 என 3 வகையாக பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. முதல் நாளில் 30 பேர் முழு உடல் பரிசோதனை செய்து கொண்டனர். தற்போது படிப்படியாக அதிகரித்து தினமும் சுமார் 100 பேர் முழு உடல் பரிசோதனை செய்துகொள்ள வருகின்றனர்.
இது தொடர்பாக அரசு பொது மருத்துவமனை டீனும், மருத்துவக் கல்வி இயக்குநருமான (டிஎம்இ) டாக்டர் ஆர்.விமலா கூறியதாவது:
அம்மா முழு உடல் பரிசோதனை திட்டம், அம்மா மகளிர் முழு உடல் பரிசோதனை திட்டம் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. தனியார் மருத்துவமனைகளில் ரூ.5 ஆயிரம், ரூ.10 ஆயிரம், ரூ.15 ஆயிரத் துக்கு செய்யப்படும் முழு உடல் பரிசோதனை, இந்த மருத்துவமனையில் ரூ.1,000, ரூ.2 ஆயிரம், ரூ.3 ஆயிரம் என குறைந்த கட்டணத்தில் செய்யப்படுகிறது. முழு உடல் பரிசோதனைக்கு வருபவர்கள் காலையில் வெறும் வயிற்றுடன் வரவேண்டும். முதல் கட்ட பரிசோதனை முடிந்த பிறகு, மருத்துவமனையிலேயே காலை உணவு வழங்கப்படும். உணவு சாப்பிட தனி அறையும் அமைக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் வசதி ஆரம்பம்
காலை 8 மணிக்கு முழு உடல் பரிசோதனைக்கு வந்தால் மதியம் வீட்டுக்கு சென்றுவிடலாம். மறுநாள் பரிசோதனை முடிவுகளை பெற்றுக்கொண்டு டாக்டர்களை சந்தித்து ஆலோசனை பெறலாம். உடலில் பிரச்சினை இருப்பது பரிசோதனையில் தெரியவந்தால், இந்த மருத்துவமனையில் அனுமதியாகி சிகிச்சையும் பெற்றுக்கொள்ளலாம். அம்மா முழு உடல் பரிசோதனைக்கு அன்லைனில் பதிவு செய்யும் வசதி நாளை (மார்ச் 9) முதல் நடைமுறைக்கு வருகிறது. ஆன்லைனில் பதிவு செய்துவிட்டு குறித்த நாளில் வந்து பரிசோதனை செய்துகொள்ளலாம். பரிசோதனை முடிவுகளையும் ஆன்லைனில் பார்த்துக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு டாக்டர் ஆர்.விமலா தெரிவித்தார்.