நேர்மையான அதிகாரிகள் தங்கள் கடமையைச் செய்யவே போராட வேண்டியுள்ளது: உயர் நீதிமன்றம் கருத்து

நேர்மையான அதிகாரிகள் தங்கள் கடமையைச் செய்யவே போராட வேண்டியுள்ளது: உயர் நீதிமன்றம் கருத்து
Updated on
1 min read

நேர்மையான அதிகாரிகள் தங்கள் கடமையைச் செய்யவே போராட வேண்டியுள்ளது என உயர் நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.

திருச்சி கரியமாணிக்கத்தைச் சேர்ந்த சக்திவேல், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

''தாயனூர் கிராம உதவியாளர் பெரியசாமியைத் தாக்கியதாக என் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவருக்கும் எனக்கும் கோயில் திருவிழாவின்போது பிரச்சினை ஏற்பட்டது. அந்த முன்விரோதம் காரணமாக அவர் என் மீது பொய்ப் புகார் அளித்துள்ளார். இந்த வழக்கில் போலீஸார் என்னைக் கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் வழங்க வேண்டும்''.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார். அப்போது நீதிபதி, ''கிராம உதவியாளரைத் தாக்கி, உப்பின் மீது முழங்காலில் நிற்க வைத்ததாக மனுதாரர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மனுதாரர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டும் இதுவரை கைது செய்யப்படவில்லை. இதனால் முன்ஜாமீன் கேட்டு வந்துள்ளார்.

போலீஸார் சாதாரண மக்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வது அவசியம். அரசு ஊழியர்கள் பலர் தங்களது வேலையை முறையாகச் செய்வதில்லை. பலர் லஞ்சம் வாங்குகின்றனர். இப்படியான சூழலில் நேர்மையாகப் பணிபுரியும் அதிகாரிகளுக்கு முறையாகப் பாதுகாப்பு வழங்குவது அவசியம்.

நேர்மையான அதிகாரிகளுக்கு எதிரான செயல்களைத் தடுக்க, முறையாகச் செயல்படாவிட்டால் அதிகாரிகள் எப்படி நேர்மையாக இருப்பார்கள்? நேர்மையான அதிகாரிகள் தங்கள் கடமையைச் செய்யவே போராட வேண்டியதுள்ளது'' என்று தெரிவித்தார்.

பின்னர் விசாரணையை அக். 26-க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in