Published : 21 Oct 2021 02:27 PM
Last Updated : 21 Oct 2021 02:27 PM

தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் 

பிரதிநிதித்துவப் படம்

சென்னை

தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி பா.கீதா இன்று (அக். 21) வெளியிட்ட அறிவிப்பு:

"குமரிக்கடல் பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஆகிய பகுதிகளில் தலா 9 செ.மீ. மழையும், குறைந்தபட்சமாக, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், நீலகிரி மாவட்டம் குந்தா பாலம், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர், கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம், விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை, கரூர் மாவட்டம் கடவூர், ஈரோடு மாவட்டம் பவானிசாகர், கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர், தஞ்சாவூர், கரூர் மாவட்டம் பாலவிடுதி, திருப்பத்தூர் மாவட்டம் வடபுதுப்பட்டு, கோவை மாவட்டம் சின்னக்கல்லார், தேனி மாவட்டம் கூடலூர், நீலகிரி மாவட்டம் பர்லியார் ஆகிய பகுதிகளில் தலா 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

குறிப்பு: வங்கக்கடல் மற்றும் தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் 26 அக்டோபர் முதல் வடகிழக்கு பருவக்காற்று வீசுவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில், தென்மேற்கு பருவமழை இந்தியப் பகுதிகளில் இருந்து விலகி வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில் எதிர்வரும் 26 அக்டோபர் ஒட்டி தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

வங்கக்கடல் பகுதிகள்:

21.10.2021: குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அரபிக்கடல் பகுதிகள்:

21.10.2021: கேரளா கடலோரப் பகுதி, லட்சத்தீவு மற்றும் தன்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மி. வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்".

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x