Published : 21 Oct 2021 03:07 AM
Last Updated : 21 Oct 2021 03:07 AM

பொதுப்பணித்துறையில் வேலை வாங்கி தருவதாக போலி பணி நியமன ஆணை கொடுத்து ரூ. 68 லட்சம் மோசடி: தூத்துக்குடியில் 2 பெண்கள் உள்ளிட்ட மூவர் கைது

போலி பணி நியமன ஆணை வழங்கி மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட சக்திவேல், ஜெயசித்ரா மற்றும் உஷா.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் பொதுப்பணித்துறையில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி போலி பணி நியமன ஆணை தயாரித்து வழங்கி, ரூ.68 லட்சம் மோசடி செய்த 2 பெண்கள் உள்ளிட்ட 3 பேரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

ஓட்டப்பிடாரம் சிலோன் காலனியைச் சேர்ந்த சண்முகராஜ் மகன் முத்துக்குமார் (29). இவரிடம் தூத்துக்குடி மில்லர்புரம், ஹவுசிங்போர்டு பகுதியைச் சேர்ந்த பிச்சைமணி மகன் சக்திவேல் (37),அவரது மனைவி ஜெயசித்ரா (30),தூத்துக்குடி கிருபை நகரைச் சேர்ந்த கல்கண்டு மனைவி உஷா (34), தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் பகுதியைசேர்ந்த மூக்கையா மகன் முத்துபாண்டி, சிலோன் காலனி முனியசாமி மகன் கார்த்திக்குமார் ஆகிய 5 பேரும் பொதுப்பணித்துறையில் நல்ல வேலை இருப்பதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.

மேலும், வேலைக்கு ரூ.3 லட்சம் கொடுத்தால் போதும் என அவர்கள் கூறியிருக்கின்றனர். இதனை நம்பிய முத்துக்குமார் தனக்கும், தனது மனைவி மற்றும் மைத்துனர் ஆகிய 3 பேருக்கு வேலை வேண்டும் என்று கூறி, சக்திவேலிடம் ரூ.6 லட்சமும், முத்துபாண்டியிடம் ரூ.3 லட்சமும் என மொத்தம் ரூ.9 லட்சம் பணத்தை கொடுத்துள்ளார்.

முத்துக்குமார் மற்றும் அவரது மைத்துனருக்கு திருச்செந்தூர் பொதுப்பணித்துறை குடோனில் பொறுப்பாளராகவும், அவரது மனைவிக்கு தூத்துக்குடி பொதுப்பணித்துறையில் கணக்கராகவும் போலியாக பணி நியமன ஆணை தயார் செய்து, அதில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் போல 5 பேரும் போலியாக கையெழுத்திட்டு கொடுத்துள்ளனர். இந்த பணி நியமன ஆணைகளை கொண்டு வேலைக்கு சென்ற போது அவை போலி என தெரியவந்தது.

முத்துக்குமார் அவர்களிடம் சென்று பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார். ரூ.90 ஆயிரத்தை மட்டும் திருப்பி கொடுத்துவிட்டு மீதி பணத்தை ஒரு மாதத்தில் தருவதாக கூறியுள்ளனர். ஆனால், பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. மாவட்ட காவல்கண்காணிப்பாளர் ஜெயக்குமாரிடம் இது தொடர்பாக முத்துக்குமார் புகார் அளித்தார்.

மாவட்ட குற்றப் பிரிவு டிஎஸ்பி (பொ) சம்பத் மேற்பார்வையில், ஆய்வாளர் வனிதா தலைமையில் தனிப்படை அமைத்து எஸ்பி உத்தரவிட்டார். தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தியதில் இந்த கும்பல் தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம் பகுதிகளில் வேறு சிலரிடமும் அரசு வேலை வாங்கி தருவதாக போலி நியமண ஆணைதயாரித்து, அதில் போலியான அரசு முத்திரைகளை பயன்படுத்தி கையெழுத்திட்டு ரூ.68.10 லட்சம்மோசடி செய்திருப்பது தெரியவந்தது. அவர்களில் சக்திவேல், அவரது மனைவி ஜெயசித்ரா, உஷா ஆகிய 3 பேரையும் போலீஸார் நேற்று கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற இருவரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x