Last Updated : 20 Oct, 2021 03:57 PM

 

Published : 20 Oct 2021 03:57 PM
Last Updated : 20 Oct 2021 03:57 PM

ஒன்றியக்குழுத் தலைவர் பதவியைக் கைப்பற்றுவதில் திமுகவினர் இடையே கோஷ்டி மோதல்: காவல்துறை தடியடி

திருப்பத்தூர்

ஆலங்காயம் ஒன்றியக்குழுத் தலைவர் பதவியைக் கைப்பற்றுவதில் திமுகவினர் இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலை காவல்துறையினர் தடியடி நடத்திக் கலைத்தனர். ஆளும்கட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம், மாதனூர் ஆகிய ஒன்றியங்களுக்கான உள்ளாட்சி அமைப்புத் தேர்தல் கடந்த 9-ம் தேதி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, 12-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. முடிவுகள் 13-ம் தேதி அறிவிப்பட்டன. இதில், ஆலங்காயம் ஒன்றியத்தில் 18 கவுன்சிலர் பதவிகளுக்கான தேர்தலில் 11 இடங்களை திமுகவும், 4 இடங்களை அதிமுகவும், 2 இடங்களில் பாமகவும், ஒரு சுயேச்சை வேட்பாளரும் வெற்றிபெற்றனர்.

இவர்களுக்கான பதவி ஏற்பு நிகழ்ச்சி ஆலங்காயம் ஒன்றிய அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றது. தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில், வெற்றிபெற்ற 18 கவுன்சிலர்களும் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர். பதவி ஏற்ற பிறகு அனைவரும் ஒற்றுமையாக வெளியே வந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

18 கவுன்சிலர்களில் 11 இடங்களில் வெற்றிப்பெற்று தனி மெஜாரிட்டியுடன் உள்ள திமுக கவுன்சிலர்களில் ஒருவர் ஒன்றியக் குழுத்தலைவராகத் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 7-வது வார்டில் வெற்றிபெற்ற ஜோலார்பேட்டை எம்எல்ஏ தேவராஜின் மருமகள் காயத்ரி பிரபாகரனுக்கும், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் ஆதரவாளரான திமுக பிரமுகர் பாரி என்பவரின் மனைவியான 6-வது வார்டு கவுன்சிலர் சங்கீதா பாரிக்கும் இடையே ஒன்றியக் குழுத்தலைவர் பதவியைக் கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவி வந்தது.

இது தொடர்பாக இரு தரப்பினரும் தனித்தனியாகப் பிரிந்து வெற்றிபெற்ற கவுன்சிலர்களைத் தங்கள் பக்கம் வைத்துக்கொள்ள குதிரை பேரத்தில் ஈடுபட்டு வந்தனர். அதன் விளைவாக காயத்ரி பிரபாகரன் பக்கம் 5 கவுன்சிலர்களும், சங்கீதா பாரி பக்கம் 6 கவன்சிலர்களும் இருந்தனர். அதிமுகவின் முன்னாள் அமைச்சரான கே.சி.வீரமணியும், தன்னை சட்டப்பேரவைத் தேர்தலில் தோற்கடித்த திமுக எம்எல்ஏ தேவராஜின் மருமகள் காயத்ரி பிரபாகரன் ஒன்றியக் குழுத் தலைவராக வரக்கூடாது என்பதால், ஆலங்காயம் ஒன்றியத்தில் வெற்றிபெற்ற 4 அதிமுக கவுன்சிலர்களும், சங்கீதா பாரிக்கு ஆதரவு தெரிவிக்கும்படி கட்டளையிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், காயத்ரி பிரபாகரன் பக்கம் உள்ள 5 கவுன்சிலர்களும் தனக்கு ஆதரவு அளிக்காவிட்டாலும், அதிமுக, பாமக மற்றும் சுயேச்சை கவுன்சிலர்கள் மூலம் ஒன்றியக்குழுத் தலைவர் பதவியை எளிதாகக் கைப்பற்றி விடலாம் என காயத்ரி பாரி காத்திருந்தார்.

ஆனால், ஒவ்வொரு கவுன்சிலருக்கும் ரூ.25 முதல் 30 லட்சம் வரை பேரம் பேசிய காயத்ரி பிரபாகரன் தரப்பு, எதிர்த் தரப்பு கவுன்சிலர்களைக் கடத்திச்செல்லத் திட்டமிட்டனர். அதன்படி, பதவி ஏற்பு நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த திமுக, அதிமுக கவுன்சிலர்களைத் தங்களுடன் வரும்படி கையைப் பிடித்து காயத்ரி பிரபாகரன் தரப்பினர் இழுத்தனர். இதைக் கண்ட காயத்ரிபாரி தரப்பினரும், பதிலுக்கு ஒன்றிய கவுன்சிலர்களைத் தங்கள் பக்கமாக இழுந்தனர். இதில், இரு தரப்பினருக்கும் இடையே கோஷ்டித் தகராறு ஏற்பட்டு ஒரு கட்டத்தில் கைகலப்பானது.

பொதுமக்கள், காவல்துறையினர் முன்னிலையில், திமுக கவுன்சிலர்கள் சட்டையைப் பிடித்து இழுத்து ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதைக் கண்ட திமுக தொண்டர்கள், தங்களது ஆதரவாளர்கள் பக்கம் சென்று எதிர் தரப்பினருடன் மல்லுக்கட்டினர். இதனால், அந்த இடமே போர்க்களமாக மாறியது.

அப்போது, அங்கு பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்த 50-க்கும் மேற்பட்ட காவலர்கள் அவர்களை சமாதானம் செய்தனர். ஆனால், அதை ஏற்காத திமுகவினர் ஒன்றிய கவுன்சிலர்களை வலுக்கட்டாயமாக இழுத்து தங்களது வாகனங்களில் ஏற்றிச்செல்ல முயன்றனர். இதனால், அங்கு பதற்றமான சூழ்நிலை உருவானது. உடனே, வேறு வழியின்றி காவல் துறையினர் தடியடி நடத்தி அவர்களைக் கலைத்தனர். ஆளும் கட்சி கவுன்சிலர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்திய இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இறுதியாக 6-வது வார்டு கவுன்சிலர் காயத்ரி பாரி தங்களது ஆதரவாளர்களுடன் தனி வாகனத்திலும், சங்கீதா பிரபாகரன் தரப்பினர் தங்களது ஆதரவாளர்களுடன் தனிவாகனத்திலும் அங்கிருந்து புறப்பட்டுச்சென்றனர். அதன்பிறகு, காவல துறையினர் அங்கு கூடியிருந்த திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என அனைவரையும் கலைந்து போகச் செய்தனர்.

கவுன்சிலர்களை வலுக்கட்டாயமாக இழுத்து வாகனங்களில் ஏற்றும்போது ஒரு சில பெண் கவுன்சிலர்கள் கீழே விழுந்து ,லேசான காயமடைந்தனர். ஆண் கவுன்சிலர்களின் சட்டை கிழியும் நிலை ஏற்பட்டது. தனித்தனி வாகனங்களில் அழைத்துச் செல்லப்பட்ட திமுக கவுன்சிலர்கள் திருவண்ணாமலை, வேலூர் ஆகிய பகுதிகளில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நாளை மறுநாள் (22-ம் தேதி) மறைமுகத் தேர்தலில் தங்களுக்கு வாக்களிக்க வேண்டும் எனக்கூறி கவுன்சிலர்களுக்குத் தடபுடலான கவனிப்பும் அரங்கேறி வருவதாக கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x