

அண்மையில் நடந்து முடிந்த 9மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், இன்று காலை 10 மணிக்கு சம்பந்தப்பட்ட ஊராட்சி அலுவலகத்தில் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்ள வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி யுள்ளது.
இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல், அக்.6 மற்றும்9-ம் தேதிகளில் 2 கட்டங்களாக நடந்தது. அத்துடன், 28 மாவட்டங்களில் காலியாக இருந்த உள்ளாட்சி பதவிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து12-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இந்தத் தேர்தல்களில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவியிடங்களுக்கு போட்டியின்றி மற்றும் போட்டி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள் அக்.20-ம் தேதி (இன்று) காலை 10 மணிக்கு தொடர்புடைய தேர்தல்நடத்தும் அலுவலர்கள் அல்லது உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் அந்தந்த மாவட்ட ஊராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் கிராம ஊராட்சி அலுவலகத்தில் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொள்ள முடிவெடுக்கப்பட்டுள் ளது.
எனவே, தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள் அனைவரும் 20-ம்தேதி காலை 10 மணிக்கு அந்தந்தஊராட்சி அலுவலகத்தில் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்ள வேண்டும். பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டவர்கள் மட்டும் 22-ம்தேதி நடக்கவுள்ள மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர், ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர், துணைத் தலைவர் மற்றும் கிராம ஊராட்சி துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடவோ அல்லது பங்களிக்கவோ, வாக்களிக்கவோ தகுதியுடையவர் ஆவர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.