Published : 20 Oct 2021 03:08 AM
Last Updated : 20 Oct 2021 03:08 AM

டெண்டர் நடைமுறைகளை மீறியதாக தனியார் நிதி நிறுவனம் மீது அரசு எடுத்த நடவடிக்கை செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை

அரசின் நலத் திட்டங்களுக்காக தங்கக் காசுகள் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் நடைமுறைகளை மீறியதாக தனியார் நிதி நிறுவனம் மீது தமிழக அரசு எடுத்த நடவடிக்கை செல்லும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தாலிக்கு தங்கம் உள்ளிட்ட தமிழக அரசின் 5 நலத் திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு வழங்க 8 கிராம் எடையுள்ள 1.11 லட்சம் தங்கக்காசுகளை கொள்முதல் செய்ய கடந்த 2018 ஜூலையில் டெண்டர் விடப்பட்டது. அதில், 22 காரட் தரம் உடைய 20 ஆயிரம் தங்கக் காசுகளை வழங்குவதாக கூறி தனியார் நிதி நிறுவனம் ஒன்று டெண்டரில் பங்கேற்று தேர்வானது.

இந்த நிலையில், ‘டெண்டர் இறுதி செய்யப்பட்ட 20 நாட்கள் கழித்தே அதற்கான ஒப்புதல் கடிதம் தரப்பட்டது. தங்கத்தின் விலை தொடர் ஏற்றத்தில் உள்ளதால் டெண்டர் தொகையை மாற்ற வேண்டும். ஒருவேளை, தங்கக் காசு கொள்முதல் விலையில் மாற்றம் செய்ய முடியாவிட்டால் டெண்டர் நடைமுறைகளில் இருந்து விலகிக்கொள்ள அனுமதிக்க வேண்டும்’ என்று அந்நிறுவனம் அரசுக்கு கோரிக்கை விடுத்தது.

ஆனால், இதை ஏற்க மறுத்த சமூகநலத் துறை அதிகாரிகள், நிறுவனம் செலுத்திய வைப்புத்தொகை ரூ.53 லட்சத்தை முடக்கியும், டெண்டர் விதிமுறைகளை மீறியதாக கூறி அந்த நிறுவனத்தை கறுப்பு பட்டியலில் சேர்த்தும் உத்தரவிட்டனர்.

இதை எதிர்த்து அந்த நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதையடுத்து, அந்த நிறுவனம் மேல்முறையீடு செய்தது.

நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் இந்த வழக்கு விசாரணை நடந்தது. தமிழக அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, டெண்டர் நடைமுறைகளை நிறுவனம் மீறியதாலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதிகள் கூறியதாவது:

டெண்டர் நடைமுறைகள் தொடர்பான விவகாரத்தில் நீதித் துறை ஆய்வு என்பது குறிப்பிட்ட வரையறைக்கு உட்பட்டது. இந்த நடவடிக்கைகள் காரணமாக மனுதாரர் தரப்பில் எவ்வித அடிப்படை உரிமைகளும் பாதிக்கப்படாத நிலையில், மாற்று முறைகள் மூலம்தீர்வு காணாமல், நேரடியாக நீதிமன்றத்தை நாட முடியாது. மேலும்அந்த நிறுவனத்தை கறுப்பு பட்டியலில் சேர்ப்பது தொடர்பாக சமூகநலத் துறை ஆணையர் விடுத்த பரிந்துரைக்கு, நிறுவனம் உரிய விளக்கம் அளிக்காத நிலையில், அதன் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது. எனவே, நிறுவனத்துக்கு எதிராக தமிழக அரசு எடுத்த நடவடிக்கை செல்லும்.

இவ்வாறு கூறிய நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x