Published : 20 Oct 2021 03:09 AM
Last Updated : 20 Oct 2021 03:09 AM

என்கவுன்ட்டர் நடந்தும் தொடரும் வழிப்பறி சம்பவங்கள்: ஸ்ரீபெரும்புதூர் பகுதி மக்கள் அச்சம்

ஸ்ரீபெரும்புதூர்

ஸ்ரீபெரும்புதூரில் வழிப்பறி திருடனை போலீஸார் என்கவுன்ட்டர் செய்த பிறகும், வழிப்பறி சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனால் ஸ்ரீபெரும்புதூர் பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், தொடுகாடு, அசோக் நகரைச் சேர்ந்த பிரேம்குமார், மனைவி தாமரைச்செல்வி(36) ஆகியோர் இருசக்கர வாகனத்தில் ஸ்ரீபெரும்புதூரை நோக்கி கிளாய் கூட்டு ரோடு, புற்றுக்கோயில் அருகில் நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தனர். அப்போது பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 மர்ம நபர்கள் தாமரைச் செல்வியின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலிச் செயினை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், வழக்குப் பதிவு செய்து வழிப்பறி கொள்ளை நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

கடந்த வாரம் இதேபோல் ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடி அருகே நகை வழிப்பறி நடைபெற்றது. இதன் காரணமாக ஒருவரை என்கவுன்ட்டர் செய்தும் மற்றொருவரை கைது செய்தும் போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டனர். அதற்குள்ளாக மீண்டும் ஒரு வழிப்பறி நடந்துள்ளதால் ஸ்ரீபெரும்புதூர் பகுதி பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர்.

ஸ்ரீபெரும்புதூர் சுற்றுப்புற பகுதிகளில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து வழிப்பறி, திருட்டு சம்பவங்கள் நடந்த வண்ணம் உள்ளன. ஒரு சில சம்பவங்களில் மட்டுமே வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. மற்றவை வழக்குப் பதிவு செய்யப்படாமல் புகார்தாரர்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.

இதுபோன்ற குற்றச் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x