Last Updated : 07 Mar, 2016 09:05 AM

 

Published : 07 Mar 2016 09:05 AM
Last Updated : 07 Mar 2016 09:05 AM

தமிழகம் முழுவதும் ஆவணம் இல்லாத பணம், பொருள் பறிமுதல்: தேர்தல் விதிகள் தெளிவாக இல்லாததால் இழப்பு - வணிகர் சங்கங்களின் பேரமைப்பு குற்றச்சாட்டு

தேர்தல் நடத்தை விதிகளின்படி பறிமுதல் செய்யப்படும் பணம், பொருட்கள் தொடர்பான விதிகள் தெளிவாக இல்லாததால், அவற்றை திரும்பப் பெறுவதில் சிக்கல் ஏற்படுவதாக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்துக்கோ, சட்டப் பேரவைக்கோ தேர்தல் அறிவிக்கப் பட்டுவிட்டால் தேர்தல் நன்னடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துவிடும். வாக்குகளை பெறுவ தற்காக பணம், பொருட்கள் வழங் கப்படுவதை தடுக்க தொகுதி தோறும் பறக்கும்படைகள் மற்றும் சோதனைச் சாவடிகள் அமைக்கப் படுகின்றன.

இவற்றில் மாநில வருவாய்த் துறை, காவல்துறை அதிகாரிகள் இடம்பெறுவர். இது தவிர, வரு வாய் புலனாய்வுத் துறை, சுங்க வரித்துறை, கலால் வரித்துறை மற்றும் வருமான வரித்துறையும் தனித்தனியாக கண்காணிப்புக் குழுக்களை அமைக்கின்றன.

உரிய ஆவணங்கள் இன்றி பறிமுதல் செய்யப்படும் பணம், நகை, பொருட்கள் உள்ளிட்டவை விசாரணைக்கு பின் உரிய ஆவ ணங்கள் இருந்தால் திரும்பி அளிக் கப்படும். இல்லாவிட்டால், அவை அரசு கருவூலத்தில் சேர்க்கப்படும்.

2011 தேர்தல்

2011-ம் ஆண்டு தமிழகத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது பணமாக ரூ.36 கோடியே 54 லட்சமும், ரூ.21 கோடியே 63 லட்சம் மதிப்புள்ள நகை உள்ளிட்ட பொருட்களும் பறிமுதல் செய்யப் பட்டன. இதில், ரூ.14 கோடியே 39 லட்சம் பணம் மற்றும் ரூ.15 கோடியே 83 லட்சம் மதிப்புள்ள பொருட்களுக்கு உரிய ஆவணங் கள் சமர்ப்பிக்கப்பட்டதால் உரியவர் களிடம் திருப்பியளிக்கப்பட்டன.

2014-ம் ஆண்டு மக்களவை தேர்தல் மற்றும் ஆலந்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலின் போது, ரூ.25 கோடியே 6 லட்சம் பணம், ரூ.51 கோடியே 83 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப் பட்டன.

7 இடைத்தேர்தல்கள்

இவை தவிர கடந்த 5 ஆண்டு களில் நடைபெற்ற 7 இடைத் தேர்தல்களின் போதும் பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப் பட்டன. இதில், திருச்சி இடைத் தேர்தலில் மட்டும் 34 கிலோ தங்கம், ரூ.40 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இவையாவும் அரசு கருவூலத்தில் செலுத்தப்பட்டன. இவற்றில் இன் னும் கோடிக்கணக்கான பணம் யாராலும் கோரப்படவில்லை என கூறப்படுகிறது.

தற்போது, தமிழக சட்டப்பேர வைக்கான பொதுத்தேர்தல் அறிவிக் கப்பட்டதை அடுத்து, 4-ம் தேதி முதலே 234 தொகுதிகளுக்கும் தலா 3 சோதனைச் சாவடிகள், 3 பறக்கும்படைகள் அமைக்கப் பட்டு கண்காணிப்பு தொடங்கியுள் ளது. இந்நிலையில், ஆவணங்கள் இல்லாத பணம் மற்றும் பொருட் களை பறிமுதல் செய்வதிலும், அவற்றை உரியவரிடம் திரும்ப ஒப்படைப்பதிலும் தெளிவான விதி முறைகளை வகுக்க வேண்டும் என வணிகர் சங்கங்கள் தெரிவித் துள்ளன.

இது தொடர்பாக, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப் பின் தலைவர் விக்கிரமராஜா கூறியதாவது: பணம் பறிமுதல் செய்வது தொடர்பாக தெளிவான விதிகளை வகுக்க வேண்டும். அதற்கு முன் வணிகர் சங்கங்களை அழைத்து பேச வேண்டும். ஏற்கெனவே ரூ.50 ஆயிரம் வரை பணம் கொண்டு செல்லலாம் என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது அதற்கும் கீழ் கொண்டு சென்றாலும் சோதனை செய்யப்படும் என தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.

எனவே, விதிகள் தெளிவு படுத்தப்பட வேண்டும். பறிமுதல் செய்யப்படும் பணமும் திருப்பி அளிக்கப்படுவதில்லை. உரிய ஆவணங்களுடன் சென்றாலும் அலைக்கழிக்கப்படுவதால், பலர் அதற்காக மெனக்கெடுவதில்லை. விவசாயிகள், பொதுமக்கள் எடுத் துச் செல்லும் பணத்துக்கு அவர் களிடம் ஆவணம், பில் இருக்காது. அவர்களே அதிகளவில் பணத்தை இழக்கின்றனர் என்று அவர் கூறினார்.

யாரும் கோரவில்லை

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தபோது பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் பொருட்களில் கணிசமான அளவு, யாராலும் உரிமை கோரப்படாமல் இன்றளவும் அரசு கருவூலத்திலேயே இருப்பதாக கூறப்படுகிறது. 2011 சட்டப் பேரவைத் தேர்தலின் போது பறிமுதல் செய்யப்பட்ட ரூ.22.15 கோடி, ரூ.5.80 கோடி மதிப்பிலான பொருட்களும், 2014 மக்களவைத் தேர்தலின்போது பறிமுதல் செய்யப்பட்ட ரூ.6.85 கோடியும் அரசு கருவூலத்தில் உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x