உள்ளாட்சித் தேர்தலுக்கு நீதிமன்றத்தில் அவகாசம் கோரப்படும்: புதுவை ஆளுநர் தமிழிசை தகவல்

உள்ளாட்சித் தேர்தலுக்கு நீதிமன்றத்தில் அவகாசம் கோரப்படும்: புதுவை ஆளுநர் தமிழிசை தகவல்
Updated on
1 min read

உள்ளாட்சித் தேர்தலைக் குறுகிய காலத்தில் நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்த நிலையில், இட ஒதுக்கீடு பட்டியல் தயார் செய்யப்படாத நிலையில் சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதால், நீதிமன்றத்தில் புதுவை அரசு அவகாசம் கேட்க உள்ளதாகத் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

புதுச்சேரி மேல்சாத்தமங்கலம் அரசு தொடக்கப் பள்ளியில் நடைபெறும் கரோனா தடுப்பூசி முகாமைத் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று பார்வையிட்டார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

''உள்ளாட்சித் தேர்தல் சம்பந்தமான வழக்கு நீதிமன்றத்தில் 21-ம் தேதி நடைபெறுகிறது. இட ஒதுக்கீடு அளித்து தேர்தல் நடத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள். அது வரவேற்கத்தக்கது. உள்ளாட்சித் தேர்தலைக் குறுகிய காலத்தில் நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்ததால், பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டிற்கான பட்டியல் தயார் செய்யப்படாத சூழ்நிலையில் சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

அரசு இதனை எடுத்துக் கூறி நீதிமன்றத்தில் அவகாசம் கேட்க இருக்கிறது. நீதிமன்றத்தில் அவகாசம் கிடைத்தால் மக்கள் நலப் பணிகள் செய்ய அரசு கோரிக்கை வைக்கலாம். தேர்தல் வழக்கு நகரும் திசையைப் பொறுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகளை நீக்க அனுமதி பெற வாய்ப்பிருக்கிறது. அனைத்தும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு அமையும். முதல்வரும், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்"

இவ்வாறு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் குறிப்பிட்டார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in