Published : 19 Oct 2021 03:08 AM
Last Updated : 19 Oct 2021 03:08 AM

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளை தொடங்க வேண்டும்: மநீம நிர்வாகிகளுக்கு கமல்ஹாசன் அறிவுறுத்தல்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகளைத் தொடங்க வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளுக்கு, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிவுறுத்தியுள்ளார்.

அண்மையில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

இந்நிலையில், மாநகராட்சிகள் உட்பட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான ஆரம்பகட்டப் பணிகளை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. இந்த தேர்தலுக்குத் தயாராகுமாறு மாநில செயலர்களுக்கு கமல்ஹாசன் அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் கூறும்போது, ``ஊரக உள்ளாட்சித் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறமுடியவில்லை. இருப்பினும், கட்சி கட்டமைப்பை பலப்படுத்துவதற்கு இத்தேர்தலைப் பயன்படுத்திக் கொண்டோம். ஏற்கெனவே கட்டமைப்பு ரீதியாக போதிய பலம் இல்லாத காரணத்தால்தான் இத்தகைய முடிவுகளை சந்திக்க வேண்டியிருந்ததாக கருதுகிறோம்.

ஆனால், நகர்ப்புறங்களைப் பொறுத்தவரை மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலில்களில் மநீம நல்ல வாக்கு வங்கியை வைத்துள்ளது. எனவே, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான இடங்களை கட்டாயம் பெற வேண்டும் என்று கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளார். எனவே, தற்போதிலிருந்தே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகளைத் தொடங்கும்படி மாநில செயலர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். அவர்களும், அதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளனர்'' என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x