Published : 19 Oct 2021 03:08 AM
Last Updated : 19 Oct 2021 03:08 AM

பரமக்குடி அருகே மகளை கொலை செய்த தாய், தந்தை கைது

கவுசல்யா

பரமக்குடி

பரமக்குடி அருகே மகளை கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக தாய், தந்தையை போலீஸார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே நண்டுபட்டி கிராமத்தைச் சேர்ந்த தென்னரசு, அமிர்தவல்லி தம்பதியின் மூத்த மகள் கவுசல்யா (23). இவருக்கும், பரமக்குடி அருகே செவ்வூர் கிராமத்தைச் சேர்ந்த கனகராஜுக்கும் 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர்.

நண்டுபட்டியில் தாய், தந்தையுடன் கவுசல்யா வசித்து வந்தார். கடந்த 15-ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷ மருந்து சாப்பிட்டு கவுசல்யா தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கவுசல்யாவை அவரது பெற்றோர் மருத்துவர்களுக்குத் தெரியாமல் வீட்டுக்கு அழைத்து வந்தனர். இந்நிலையில் கவுசல்யா திடீரென உயிரிழந்தார். இது தொடர்பாக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்காமல் கவுசல்யாவின் உடலை பெற்றோர் எரித்துவிட்டனர்.

தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் ஹேமா, எமனேசுவரம் போலீஸில் புகார் அளித்தார். சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வந் தனர். இதில், கவுசல்யாவை அவரது பெற்றோர் கொலை செய்ததாகத் தெரிய வந்தது. இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறிய தாவது: கணவரிடமிருந்து பிரிந்த கவுசல்யா, மற்றொரு பிரிவைச் சேர்ந்த இளைஞருடன் பழகி வந்துள்ளார். இதை கவுசல்யாவின் பெற்றோர் கண்டித்து வந்துள்ளனர். ஆனால் அதை கேட்காமல் கவுசல்யா தொடர்ந்து பழகி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர், கவுசல்யாவை கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்ததை நேற்று கொலை வழக்காக மாற்றி தென்னரசு (58), அமிர்தவல்லி (48) ஆகியோரை கைது செய்துள்ளோம். உடலை எரிக்க உடந்தையாக இருந்தவர்கள் குறித்து விசாரித்து வருகிறோம் என்று கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x