Published : 18 Oct 2021 08:00 PM
Last Updated : 18 Oct 2021 08:00 PM

கேரள வெள்ளம்; முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி: திமுக அறிவிப்பு

சென்னை

பெருவெள்ளத்தால் கேரள மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, அம்மாநில முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கப்படும் என்று திமுக அறிவித்துள்ளது.

தென்கிழக்கு அரபிக் கடலில் கடந்த வாரம் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலையால் கேரளாவில் பரவலாக மழை பெய்து வந்தது. கடந்த வெள்ளிக்கிழமை காற்றழுத்தத் தாழ்வு நிலை மேலும் வலுப்பெற்றதால் மாநிலம் முழுவதும் கனமழை பெய்தது.

தெற்கே திருவனந்தபுரம் தொடங்கி வடக்கே காசர்கோடு வரை அனைத்து மாவட்டங்களிலும் அதிகனமழை பெய்துவருகிறது. இடைவிடாது பெய்த மழையால் மாநிலமே வெள்ளக்காடாகக் காட்சி அளிக்கிறது.

குறிப்பாக, திருவனந்தபுரம், கோட்டயம், பத்தனம்திட்டா, இடுக்கி, கொல்லம் ஆகிய மாவட்டங்களில் மழையால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இதுதவிர, மற்ற மாவட்டங்களும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அங்கு வசித்த ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் சிக்கித் தவித்து வருகின்றனர்.

அவர்களை மீட்கும் பணியில் ராணுவத்தினர், தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்புப் படையினர் இணைந்து ஈடுபட்டுள்ளனர். படகுகள், ஹெலிகாப்டர் மூலம் மக்களை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன. மழை, வெள்ளம், நிலச்சரிவு ஆகியவற்றால் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

பெருவெள்ளத்தால் கேரள மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, அம்மாநில முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கப்படும் என்று திமுக அறிவித்துள்ளது.

இதுகுறித்து திமுக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கேரள மாநிலத்தில் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கின் காரணமாகப் பேரழிவு ஏற்பட்டுள்ளது. பலர் உயிரிழந்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கானோர் வீடிழந்து, இடப் பெயர்ச்சிக்கு ஆளாகியிருக்கிறார்கள். பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் சேதமடைந்திருக்கின்றன.

பாதிப்புக்கு ஆளாகியிருக்கும் மக்களுக்கு ஆதரவு அளித்திடும் நோக்கில், திமுக அறக்கட்டளை சார்பாக கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாயை திமுக அறக்கட்டளையின் தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (18.10.2021) வழங்குவதாக அறிவித்துள்ளார்.

இப்பெருவெள்ளத்தின் காரணமாக உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், பாதிப்புக்கு ஆளாகி இருப்போருக்கு ஆறுதலையும் திமுக தெரிவித்துக் கொள்கிறது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x