Last Updated : 18 Oct, 2021 06:37 PM

 

Published : 18 Oct 2021 06:37 PM
Last Updated : 18 Oct 2021 06:37 PM

திருச்சியில் விஜயபாஸ்கரின் சகோதரர் வீடுகள் உட்பட 5 இடங்களில் சோதனை

விஜயபாஸ்கர்: கோப்புப்படம்

திருச்சி

திருச்சியில் விஜயபாஸ்கரின் சகோதரர் வீடுகள் உட்பட 5 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் இன்று சோதனை மேற்கொண்டனர்.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக, அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா ஆகியோர் மீது, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அவர்களுடன் தொடர்புடையவர்களின் வீடுகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் இன்று (அக். 18) சோதனை மேற்கொண்டனர்.

இதன்படி, திருச்சி எடமலைப்பட்டி புதூர் ராமச்சந்திரா நகரிலுள்ள தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் விஜயபாஸ்கரின் சகோதரர் உதயகுமாரின் 2 தனித்தனி வீடுகளிலும், அதே குடியிருப்பில் வசிக்கும் விஜயபாஸ்கரின் உறவினரும், ஒப்பந்ததாரருமான தர்மலிங்கம் வீட்டிலும் திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான சக்திவேல், சேவியர் ராணி, அருள்ஜோதி உள்ளிட்டோரைக் கொண்ட போலீஸார் சோதனை நடத்தினர்.

இதுதவிர, கிராப்பட்டி காந்தி நகரில் வசிக்கும் விஜயபாஸ்கரின் ஆதரவாளரான குருபாபு (எ) ராஜமன்னார் வீடு, எடமலைப்பட்டிபுதூர் நியூ பாப்பா காலனியிலுள்ள சிவா ரைஸ் மில் நிர்வாகியான சுதாகரின் வீடு ஆகியவற்றிலும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர்.

சோதனையின்போது உதயகுமாரின் வீட்டிலிருந்து 105 பவுன், தர்மலிங்கம் வீட்டில் இருந்து 98 பவுன் மற்றும் ஏராளமான இடங்களிலுள்ள சொத்துகளுக்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்புடைய 5 இடங்களிலும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x