வேலூர் அரசு மருத்துவமனையில் பேரறிவாளனுக்கு மருத்துவப் பரிசோதனை

பேரறிவாளன்: கோப்புப்படம்
பேரறிவாளன்: கோப்புப்படம்
Updated on
1 min read

சிறுநீரக தொற்றால் அவதிப்பட்டு வரும் பேரறிவாளனுக்கு சி.டி.ஸ்கேன் எடுக்க வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு இன்று அழைத்துச்செல்லப்பட்டார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளன், கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக, மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள கடந்த மே மாதம் 28-ம் தேதி பேரறிவாளனுக்கு தமிழக அரசு 30 நாட்கள் பரோல் வழங்கியது. இதனைத்தொடர்ந்து, சென்னை புழல் சிறையில் இருந்து திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு பேரறிவாளன் வந்தார். அதன்பிறகு 4 முறை பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிக்கப்பட்டது.

ஜோலார்பேட்டையில் வீட்டில் தங்கியிருந்தபடி அவர் மருத்துவ சிகிச்சை எடுத்து வருகிறார். நீதிமன்ற உத்தரவுப்படி தினமும் ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் அவர் கையெழுத்திட்டு வருகிறார். இந்நிலையில், பேரறிவாளன் சிறுநீரக தொற்று காரணமாக கடந்த சில நாட்களாக அவதிப்பட்டு வந்தார்.

இதனைத்தொடர்ந்து, அவருக்கு சி.டி.ஸ்கேன் எடுக்க வேண்டும் என, மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர். அதன்பேரில், ஜோலார்பேட்டையில் இருந்து வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பேரறிவாளன் இன்று (அக். 18) காலை பலத்த பாதுகாப்புடன் அழைத்துச்செல்லப்பட்டார். அங்கு சி.டி.ஸ்கேன் எடுத்து முடித்தபிறகு மீண்டும் அவர் ஜோலார்பேட்டைக்கு அழைத்து வரப்பட்டார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in