Published : 18 Oct 2021 01:43 PM
Last Updated : 18 Oct 2021 01:43 PM

பொதுப்பணித்துறை அலுவலர்களின் செயல்பாடுகள்: அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு.

சென்னை

பொதுப்பணித்துறை அலுவலர்களின் செயல்பாடுகள் குறித்து, பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார்.

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (அக்.18) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"பொதுப்பணித் துறையின் பல்வேறு திட்டங்கள், அறிவிப்புகள் ஆகியவற்றைச் செயல்படுத்திய விவரம், நிலுவையிலுள்ள திட்டங்களை விரைவுபடுத்த வேண்டியது தொடர்பாக, இன்று காலையில் தலைமைச் செயலகத்தில் பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர்களுடன் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார்.

பொதுப்பணித்துறை உயர் அலுவலர்கள் துறை சார்ந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டவை, நிலுவையிலுள்ளவையின் விவரங்களை அமைச்சரிடம் எடுத்துரைத்தார்கள். இந்த ஆண்டு சட்டப்பேரவையில் அறிவித்த திட்டங்களில் ஆணை பிறப்பிக்கப்பட்டவை, ஆணை பிறப்பிக்கப்பட வேண்டியது அனைத்தையும் விவரமாகக் கேட்டறிந்தார்.

இத்திட்டங்களை உடனடியாக ஆணை பிறப்பித்து பொதுமக்கள் பயன்படுத்தத்தக்க வகையில், உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். இதைப் போல, மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நினைவு நூலகம் மற்றும் கலைஞர் நினைவிடம் ஆகியவற்றின் பணிகள் துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்றும், இதில் எந்தப் பணியிலும் காலதாமதம் இருக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தினார்".

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x