சொத்துக் குவிப்பு வழக்கு: அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் ரெய்டு

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் வீட்டில் நடத்தப்பட்டு வரும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினரின் சோதனை.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் வீட்டில் நடத்தப்பட்டு வரும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினரின் சோதனை.
Updated on
2 min read

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதி அதிமுக எம்எல்ஏ சி.விஜயாஸ்கர். இவர், கடந்த அதிமுக ஆட்சியில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருந்தார்.

இந்நிலையில், இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள அமைச்சரின் வீடு, திருவேங்கைவாசலில் உள்ள அவரது கல்குவாரி, இவரது குடும்பத்தினருக்கு சொந்தமான மேட்டுசாலையில் உள்ள கல்வி நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினர் இன்று (அக்.18) அதிகாலையில் இருந்து அதிரடியாக சோதனை செய்து வருகின்றனர்.

இதேபோன்று, புதுக்கோட்டை, ஆலங்குடி என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அமைச்சரின் நெருங்கிய கட்சி பிரமுகர்கள், அரசு ஒப்பந்ததாரர்கள், கல்வியாளர்கள் வீடுகள் என மாவட்டத்தில் 23-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது. இவை உட்பட தமிழகத்தில் 43 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

கோவை ராமநாதபுரம் விடிவி நகரில் உள்ள முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் மாமனார் சுந்தரம் வீட்டில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர்: படம்: ஜெ.மனோகரன்.

கடந்த ஆட்சியில் மருத்துவமனைகளுக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்கியது, அனுமதி அளித்தது, கரோனா பரவல் தடுப்புக்காக மருத்துவ உபகரணங்கள் வங்கியதில் பல்வேறு மோசடி நடந்திருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

இதுதவிர, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக கடந்த அதிமுக ஆட்சியின்போது, மத்திய புலனாய்வு பிரிவினர் விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகம், கல்குவாரிகளில் சோதனை நடத்தினர். அதில் பல்வேறு ஆவணங்களை கைப்பற்றியதோடு, கல்குவாரியில் அரசு நிர்ணயித்த அளவைவிட பலநூறு மடங்கு அதிகமாக கல் வெட்டி எடுத்துள்ளதாகவும் தகவல் வெளியானது.

இதன் அடிப்படையிலும், சட்டப்பேரவைத் தேர்தலின்போது தாக்கல் செய்யப்பட்ட விஜயபாஸ்கர், மனைவி ரம்யா, மகள்கள் பெயரிலான அசையும், அசையா சொத்து விவரங்கள் அடங்கிய பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்பட்ட விவரங்கள் அடிப்படையிலும் சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கரின் வீட்டின் முன்பு அதிமுகவினர் ஏராளமானோர் திரண்டுள்ளனர். சோதனைக்கு இடயூறாக இருப்பதாகக் கூறி இவர்களை போலீஸார் வெளியேற்றினர். இதனால், போலீஸாருக்கும், அதிமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

சோதனை முடிவுக்குப் பின்னரே, யார் யார் வீட்டில் இருந்து என்னென்ன கைப்பற்றப்பட்டன போன்ற விவரங்கள் தெரியவரும். இந்த சோதனையானது இரவு வரை கூட தொடரும் எனவும் ஊழல் தடுப்பு பிரிவுனர் கூறுகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in