

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பத்தூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பெய்யும்.
நாளை தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.
20-ம் தேதி டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, திருச்சி, மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், இதரதென் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், வட மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசான மழையும் பெய்யும்.
21-ம் தேதி டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், இதர தென் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமானமழையும், மேற்குத் தொடர்ச்சிமலையை ஒட்டிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழையும் பெய்யக்கூடும்.
சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மழைக்கு வாய்ப்பு இல்லை.
திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் 27 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இத்தகவலை சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் செய்தியாளர்களிடம் நேற்று தெரிவித்தார்.