Last Updated : 18 Oct, 2021 03:11 AM

 

Published : 18 Oct 2021 03:11 AM
Last Updated : 18 Oct 2021 03:11 AM

பாலாற்றங்கரையோர வெள்ளப்பெருக்கால் சென்னை புறநகர் குடிநீர் ஆழ்துளை கிணறுகளில் நீர்சுரப்பு அதிகரிப்பு: கரையோர கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயரும்

காஞ்சிபுரம் பாலாற்றின் இடது கரையோரத்தில் ஆர்ப்பரித்து செல்லும் தண்ணீர்.

காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் பாலாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் சென்னை புறநகர் பகுதிக்கு குடிநீர் வழங்கும் ஆழ்துளை கிணறுகளில் நீர் சுரப்பு அதிகரித்துள்ளது.

ஆந்திர மாநில பகுதிகள் மற்றும் வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது, அப்பகுதியில் உள்ள சிறிய அளவிலான தடுப்பணைகள் நிரம்பி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பாலாற்றில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. எனினும், ஆற்றுப்படுகை முழுவதும் தண்ணீர் செல்லவில்லை.

வாலாஜா அருகே உள்ள அணைக்கட்டில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் பாலாற்றின் 2 கரையோரங்களில் மட்டும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், கரை\யோரத்தில் உள்ள திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மாமண்டூர், தூசி மற்றும் கோவிந்தவாடி அகரம் உள்ளிட்ட கிராமங்களின் ஏரிகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.

மீதமுள்ள தண்ணீர் செவிலிமேடு பாலாற்றில் பாய்கிறது. இதனால், இருபக்க கரையோரத்தில் உள்ள விஷார், முத்துவேடு, திருமுக்கூடல், வளத்தோட்டம், குருவிமலை, வாலாஜாபாத் உட்பட 30 கிராமங்களுக்கு மட்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மேலும், பாலாற்றில் ஓடும் நீரால் கரையோர கிராமங்களில் உள்ள ஏரிகளுக்குச் செல்லும் கால்வாய்களில் நீரோட்டம் ஏற்பட்டு, ஏரிகள் விரைவாக நிரம்புவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதுதவிர, நீண்ட நாட்களுக்குப் பிறகு கரையோரத்தில் மட்டுமே தண்ணீர் செல்வதால் கரையோர நீர்நிலைகள் அனைத்தும் நிரம்புவதோடு, அதையொட்டியுள்ள கிராமப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக, பாலாறு கீழ்வடி நிலக்கோட்ட அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, பாலாறு வடிநில கோட்ட அதிகாரிகள் கூறியதாவது:

பாலாற்றில் முழுவதுமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால் தண்ணீர் வேகமாக அடித்து செல்லப்படும். தற்போது கரையோரத்தில் மட்டும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 8 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று அதிகாலை நிலவரப்படி 5 ஆயிரம் கன அடியாக உள்ளது.

நீரோட்டத்தால் ஆற்றுப்படுகையில் தண்ணீர் அதிக அளவில் உறிஞ்சப்படும். இதன்மூலம், கரையோரங்களில் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களின் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக அதிகரிக்கும். மேலும், பாலாறுடன் இணைந்துள்ள கால்வாய்கள் மூலம் கிராமப்பகுதி நீர்நிலைகளுக்கு தண்ணீர் செல்வதால் ஏரி, குளங்கள் நிரம்புவதற்கான வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.

இதுதவிர, பழைய சீவரம் அருகே கட்டப்பட்டு வரும் தடுப்பணையின் பணிகள் 85 சதவீதம் நிறைவடைந்துள்ளதால், அப்பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதன்மூலம், அப்பதியில் உள்ள சென்னையின் புறநகர் பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் ஆழ்துளை கிணறுகளில் நீர்சுரப்பு அதிகரிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x