Published : 18 Oct 2021 03:11 AM
Last Updated : 18 Oct 2021 03:11 AM

கிருமாம்பாக்கம் பகுதியில் தூர்வாரப்படாத கழிவுநீர் வாய்க்கால்களால் நோய் பரவும் அபாயம்: இளைஞர்களே முன்வந்து சுத்தம் செய்தனர்

கிருமாம்பாக்கம் பகுதியில் கழிவுநீர் வாய்க்காலை சுத்தம் செய்யும் இளைஞர்கள்.

புதுச்சேரி

கிருமாம்பாக்கம் பகுதியில் அதிகாரிகளின் அலட்சியத்தால் பல நாட்களாக தூர்வாரப் படாமல் கிடந்த கழிவுநீர் வாய்க்கால்களை அப்பகுதி இளைர்களே சுத்தம் செய்தனர்.

புதுச்சேரி மாநிலம் பாகூர் கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட கிருமாம்பாக்கம் பேட் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் வாய்க்கால்கள் வழியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப் பட்டது. இந்த கழிவுநீர் வாய்க்கால்கள் முறையாக அமைக்கப்படாததாலும், பல ஆண்டுகளாக தூர்வாரப்படாததாலும் வாய்க்காலில் மண் தூர்ந்து அடைப்பு ஏற்பட்டது. வாய்க்காலில் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுப் பொருட்கள் அடைத்துக்கொண்டு கழிவுநீர் வெளியேற வழியின்றி தேங்கி துர்நாற்றம் வீசியது. சில இடங்களில் சாலைகளில் வழிந்தோடுகிறது. இதனால் கொசு உற்பத்தியாகி டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவி வருகின்றன.

இதேபோல் வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்ட போதிய குப்பை தொட்டி கள், இடங்கள் இல்லாததால் சாலைகளிலும், தெருமுனைகளிலும் கொட்டப்படுகின்றன. குப்பைகளை கோழி மற்றும் கால்நடைகள் கிளறி விடுவதால் ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் அவல நிலையும் உள்ளது. இதனால் பொதுமக்கள் பல்வேறு இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்த கழிவுநீர் மற்றும் குப்பைகளால் குடும்ப சண்டைகளும் ஏற்படுகிறது. இவற்றை சரி செய்யக்கோரி கொம்யூன் பஞ்சாயத்து மற்றும் அரசுக்கு பல்வேறு மனு அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் கிருமாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் முன்வந்து தாங்களே கழிவுநீர் வாய்க்கால்களை தூர்வார முடிவெடுத்தனர். அதன்படி நேற்று ஒன்று சேர்ந்த இளைஞர்கள் கழிவுநீர் வாய்க்கால்களை சுத்தம் செய்தனர்.

இதுபற்றி இளைஞர்கள் கூறும்போது, ‘‘கிருமாம்பாக்கம் பகுதியில் பல ஆண்டுகளாக கழிவுநீர் வாய்க்கால்கள் தூர்வாரப்படவில்லை. முறையாகவும் அமைக்காததால் ஆங்காங்கே வாய்க்கால்கள் உடைந்து கிடக்கிறது. பல இடங்களில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி யுள்ளது.

தற்போது கரோனா பெருந்தொற்றினால் பொதுமக்கள் அவதியுற்று வரும் நிலையில், கழிவுநீர் வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால் அதிலிருந்து உருவாகும் கொசுக்களினால் பல்வேறு தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே தூர்வாரப்படாத கழிநீர் வாய்க்கால்களை நுன்னறிவுடன் செயல்பட்டு விரைந்து சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x