Published : 17 Oct 2021 01:37 PM
Last Updated : 17 Oct 2021 01:37 PM

அதிமுக பொன்விழா ஆண்டு கொண்டாட்டம் தொடக்கம்: எம்ஜிஆர், ஜெ. நினைவிடங்களில் ஓபிஎஸ்- ஈபிஎஸ் மரியாதை

சென்னை

அதிமுக பொன்விழா ஆண்டு கொண்டாட்டம் இன்று தொடங்கிய நிலையில், எம்ஜிஆர், ஜெ. நினைவிடங்களில் ஓபிஎஸ்- ஈபிஎஸ் மரியாதை செலுத்தினர்.

மறைந்த முதல்வர் எம்ஜிஆர், அதிமுக கட்சியைத் தொடங்கி 49 ஆண்டுகள் நிறைவடைந்து இன்று 50-வது ஆண்டு தொடங்குகிறது. இதையொட்டி, அதிமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு நடக்கும் நிகழ்ச்சியில், முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, அதிமுககட்சிக் கொடியை ஏற்றி வைத்தனர். நிர்வாகிகள், தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினர். அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழ் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள அதிமுக பொன்விழா சிறப்பு மலரும் வெளியிடப்பட்டது.

தொடர்ந்து, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, எம்ஜிஆர் நினைவிடங்களுக்குச் சென்று ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் மரியாதை செலுத்தினர். பின்னர் ஜெயலலிதா நினைவிடத்துக்குச் சென்று இருவரும் மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம், தலைமைக் கழக நிர்வாகிகள், தற்போதைய மற்றும் முன்னாள் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x