Last Updated : 17 Oct, 2021 03:07 AM

 

Published : 17 Oct 2021 03:07 AM
Last Updated : 17 Oct 2021 03:07 AM

சர்வதேச கடல் எல்லைகளைத் தாண்டும் படகுகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு: அபராதம் விதிக்கும் பணியில் மீன்வளத் துறை அதிகாரிகள் தீவிரம்

சர்வதேச கடல் எல்லைகளைத் தாண்டும் படகுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அபராதம் விதிக்கும் பணியில் மீன்வளத் துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் 11 லட்சத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள், விசைப்படகு, பைபர் படகு உள்ளிட்டவற்றின் மூலம் மீன்பிடிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில், கச்சத்தீவு அருகே இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே சர்வதேச கடல் எல்லைவரையறுக்கப்பட்டுள்ளது. இதைத் தாண்டி செல்லும் படகுகளுக்கு அபராதம் விதிக்கும் பணியில் மீன்வளத் துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, கடந்த 2 ஆண்டுகளில் ரூ.7 லட்சம் அபராதம் வசூலிக் கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, மீன்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதா வது:

சர்வதேச கடல் எல்லைகளைத் தாண்டி மீன்பிடிப்பு பணிகளில் ஈடுபடக்கூடாது என்று மீனவ கிராமங்களுக்கு சென்று தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இதுதவிர, கடலோர காவல் படை,கப்பல் படை உள்ளிட்ட அதிகாரிகளின் துணையுடன் சர்வதேச கடல்எல்லைகளை மீனவர்கள் தாண்டாத வகையில் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

சர்வதேச கடல் எல்லையை அறியாமல் செல்லும் மீனவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டால் அல்லது மீனவர்கள் கைது செய்யப்பட்டால் மாநில அரசின் மூலமாக மத்திய அரசுக்கு தகவல் தெரிவிக்கப்படும். பின்னர், மத்திய அரசு இலங்கை அரசிடம் பேசி பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்பது, கைது செய்யப்பட்ட மீனவர்களை இந்தியாவுக்கு அழைத்து வருவது உள்ளிட்டநடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

சிலர் தெரிந்தே சர்வதேச கடல் எல்லையை தாண்டி வருகின்றனர். அவ்வாறு செல்பவர்களுக்கு முதல்முறை ரூ.1000, இரண்டாவது முறைரூ.2,500, மூன்றாவது முறை ரூ.5 ஆயிரத்துடன் படகு உரிமம் தற்காலிகமாக நிறுத்தி வைப்பது, நான்காவது முறை சர்வதேச எல்லையை தாண்டினால் படகு உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்வது உள்ளிட்ட அபராதங்களை விதித்து வருகிறோம்.

2019 மற்றும் 2020 ஆகிய 2ஆண்டுகளில் சர்வதேச எல்லைகளைத் தாண்டிய 281 படகுகளின் உரிமையாளர்களிடம் இருந்து ரூ.7 லட்சத்து 19 ஆயிரம் அபராதமாகவசூலிக்கப்பட்டுள்ளது. மீனவர்களின் நலன், பாதுகாப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டுதான்அபராதங்களை வசூல் செய்யும்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள் ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x