நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான ஆரம்பகட்ட பணிகள் தொடக்கம்: அமைச்சர் கே.என்.நேரு தகவல்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான ஆரம்பகட்ட பணிகள் தொடக்கம்: அமைச்சர் கே.என்.நேரு தகவல்
Updated on
1 min read

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை விரைந்து நடத்தும் வகையில் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டு உள்ளதாக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

திருச்சியில் ரூ.4.5 கோடியில் குடிநீர் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளும் வகையில் புதிய மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் கூறியதாவது: மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். எனவே, அதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கியுள்ளன. அதன்படியே மாநகராட்சி, நகராட்சிகள் தரம் உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. மாநிலத் தேர்தல் ஆணையத்துடன் கலந்துபேசி, அவர்கள் சொல்லக்கூடிய தேதியில் தேர்தல் நடைபெறும்.

கடந்த அதிமுக ஆட்சியில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் திமுக வெற்றி பெற்ற இடங்களில், அதிமுக வெற்றி பெற்றதாக அறிவித்தனர். தற்போதும் அதுபோல நடந்திருக்கும் என நினைத்து எங்களைக் குற்றம் சொல்கின்றனர். திமுக ஆட்சியில் தேர்தல் அதிகாரிகள் நேர்மையாக நடந்து கொண்டுள்ளனர். சில இடங்களில் ஒரு வாக்கு, 4 வாக்குகள் வித்தியாசத்தில்கூட திமுகவேட்பாளர்கள் தோல்வியடைந்துள்ளனர். அதிகாரிகள் நேர்மையாக நடந்து கொண்டதால்தான், இவ்வாறு நடந்துள்ளது. அவர்கள் ஆட்சி காலத்தைவிட இப்போது தேர்தல் ஆணையம் சிறப்பாக உள்ளது.

முதல்வர் உத்தரவின்பேரில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில்கள் மீண்டும் திறக்கப் போவதை தெரிந்துகொண்டுதான், பாஜகவினர் தாங்கள் கூறியதால்தான் கோயில்கள் திறக்கப்பட்டுள்ளன என்று பேசி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in