

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை தற்காலிகமாக வாடகை கட்டிடத்தில் நடப்பாண்டே செயல்படுத்த மத்திய அரசு கொள்கை ரீதியாக முடிவெடுத்துள்ளது. அதற்கான வாடகையையும் அவர்கள் தருவதாக உறுதியளித்துள்ளனர் என்று தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
மதுரையில் தோப்பூரில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய இடத்தில் இன்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.
அவருடன் மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் ரத்தினவேலு, தோப்பூர் அரசு காசநோய் மருத்துவமனை நிலைய அதிகாரி காந்திமதி நாதன் மற்றும் மருத்துவத்துறை உயர் அதிகாரிகள் சென்றனர்.
அதன்பின் ராதாகிருஷ்ணன், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் அமைய வேண்டும் என்பதுதான் எல்லோருடைய எதிர்பார்ப்பாக உள்ளது. முதல்வர் ஸ்டாலின், பிரதமரை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்காக குரல் கொடுத்து கொண்டிருக்கிறார். ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை கட்டுமானப் பணிகளை விரைவில் தொடங்க வேண்டும் என்று முக்கியமான கோரிக்கையை தொடர்ந்து மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளோம்.
இந்தத் திட்டத்துடன் 150 படுக்கைகளுடன் கூடிய ஒரு தொற்று நோய்ப் பிரிவையும் சேர்த்து கட்டுவதற்கு 1,977.8 கோடி நிதி உதவி பெற ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனத்திடம் மத்திய அரசு கடன் கேட்டுள்ளது. அந்த நிறுவனமும், கடந்த மார்ச் 26 ஆம் தேதி தன்னுடைய ஒப்புதலை வழங்கியுள்ளது. ‘எய்ம்ஸ்’க்கு ஒதுக்கப்பட்ட இடத்தைச் சுற்றி காம்பவுண்ட் சுவர் கட்டியிருந்தாலும், இந்த வளாகத்தில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையின் எந்தெந்த பிரிவு கட்டிடங்களை எங்கு கட்டுவது உள்ளிட்டவற்றை ஆராய கண்சல்ட்டென்ட் நியமிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மாநில அரசு 90 சதவீதம் செய்து முடித்துள்ளது. தற்காலிகமாக நடப்பாண்டு மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவக் கல்லூரியில் 50 மாணவர்களை சேர்க்க மத்திய அரசு கொள்கை ரீதியாக கூறியுள்ளது.
உயர் நீதிமன்ற வழக்கில் மத்திய அரசு கட்டிடம் கட்டி முடிக்கும் வரை வாடகைக் கட்டிடத்தில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைய நடத்துவதற்கு தயார் என்றும், அதற்கான வாடகையையும் தருவதாகக் கூறியுள்ளது.
மதுரை மாவட்ட மக்கள், மட்டுமில்லாது தமிழக மக்களும் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை வெறும் அறிவிப்பாக மட்டுமே இருக்காமல் விரைவில் பயன்பாட்டிற்கும் வர வேண்டும் என விரும்புகின்றனர்.
இந்த மருத்துவமனை புறநோயாளிகள், வெளி நோயாளிகள் பிரிவாக மட்டுமே செயல்படாமல் ஆராய்ச்சி ரீதியாக இருக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறோம். ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு தற்காலிக கட்டிடம் தேர்வு செய்வவது குறித்தும், அதற்கான வசதிகளை ஏற்படுத்துவது பற்றியும் முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.
மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை கட்டுமானப் பணிகைளயும், அதன் செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்க மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை நிர்வாக இயக்குனர் மட்டுமில்லாது புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, ராஜ்கோட் எய்ம்ஸ் மருத்துவமனையின் இணை இயக்குனர்களையும் ஒருங்கிணைத்து, ஒரு ஒருங்கிணைப்பு குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவினர், சென்னைக்கு 20 ஆம் தேதி வர இருக்கிறார்கள். அவர்களிடம் ‘எய்ம்ஸ்’ மருத்துவ மாணவர் சேர்க்கை, தற்காலிக கட்டிடம், விரைவில் கட்டுமானப்பணியை தொடங்குவது பற்றி ஆலோசிக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.