இலங்கைக் கடற்படையால் 23 தமிழக மீனவர்கள் சிறைப்பிடிப்பு: நடவடிக்கை கோரி பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

முதல்வர் ஸ்டாலின் - பிரதமர் மோடி: கோப்புப்படம்
முதல்வர் ஸ்டாலின் - பிரதமர் மோடி: கோப்புப்படம்
Updated on
1 min read

இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள, தமிழகத்தைச் சேர்ந்த 23 மீனவர்களை உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (அக். 15) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"தமிழக முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில், கடந்த 11-10-2021 அன்று நாகப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிப் படகுகளில் மீன் பிடிக்கச் சென்ற 23 மீனவர்கள், 13-10-2021 அன்று, பாரம்பரிய மீன்பிடித் தளமாக உள்ள பருத்தித்துறை அருகே இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டு, காரைநகர் கடற்படைத் தளத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இலங்கைக் கடற்படையினரின் இந்த நடவடிக்கை மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய, இலங்கை மீனவர்களுக்கிடையேயான இந்த நீண்டகாலப் பிரச்சினையில் உடனடியாக இந்தியப் பிரதமர் தலையிட்டு, இப்பிரச்சினையை நிரந்தரமாகத் தீர்த்திட, உறுதியான வழிமுறைகளைக் காண வேண்டுமென்றும், முதல்வர் தனது கடிதத்தின் மூலம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள 23 மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட, இலங்கை அதிகாரிகளிடம் உறுதியாக, தீர்க்கமான முறையில் இந்தப் பிரச்சினையை எடுத்துச் சென்றிட இந்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு வலியுறுத்துமாறு பிரதமரைத் தனது கடிதத்தில் முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், இலங்கைக் கடற்படையினரால் அப்பாவி மீனவர்கள் தொடர்ந்து இதுபோன்று தாக்கப்படுவது ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள முதல்வர், பிரதமர், உரிய வழிமுறைகளைக் கையாண்டு, இதற்கு நிரந்தரத் தீர்வினைக் காண வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளார்".

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in