Published : 15 Oct 2021 01:38 PM
Last Updated : 15 Oct 2021 01:38 PM

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தியதில் 70% இலக்கை எளிதில் அடைய உள்ளோம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

முதல்வரின் தீவிர நடவடிக்கைகளினால் தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தியதில் 70 சதவிகிதம் இலக்கினை எளிதில் அடையவிருக்கிறோம் என, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (அக். 15) சென்னை மெட்வே ஹார்ட் இன்ஸ்டிடியூட்டின் 5-வது கிளையைத் தொடங்கி வைத்தார்.

அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

"உலகில் நடைபெறுகிற இறப்புகளில் 32 சதவிகிதம் இதய நோயினால் ஏற்படுகிறது என்று ஒரு புள்ளிவிவரம் குறிப்பிடுகிறது. சராசரியாக ஆண்டொன்றுக்கு 1 கோடியே 86 லட்சம் பேர் இதய நோயினால் இறக்கின்றனர்.

இந்நோயிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கு இருதய நோய்க்கான விழிப்புணர்வு என்பது மிக அவசியமான ஒன்றாகும். இதய நோய்கள் வராமல் தடுப்பதற்கு ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கங்கள், உடற்பயிற்சி, போதை வஸ்துக்கள் புகையிலையைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்.

இதய நோய்களிலிருந்து தற்காத்துக்கொள்ள இதுபோன்ற மருத்துவமனைகள் தொடர்ந்து சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டு வருகின்றனர். இதய நோய்களுக்கான மருத்துவமனைகள் சென்னையில் பல இடங்களில் திறக்கப்பட்டு வருகின்றன. மெட் வே ஹார்ட் இன்ஸ்ட்டியூட் மருத்துவமனையில் அதிநவீன கருவிகளுடன் கூடிய மருத்துவமனையாக விளங்கி வருகிறது.

முதல்வர் ஒவ்வொரு முறை கரோனா தளர்வுகள் அறிவிக்கிறபோதும் விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தத் தவறுவதில்லை. முகக்கவசம் அணிவதில் தொடங்கி கரோனா காலத்து விதிமுறைகளைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தி வருகிறார்.

மாவட்ட ஆட்சி நிர்வாகங்கள், அதிகமாக மக்கள் கூடுகிற இடங்களில் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படவில்லை என்றால், கூடுதலான அபராதங்களை விதித்துக் கொண்டும் நடவடிக்கை மேற்கொண்டும் வருகிறார்கள்.

இவற்றையெல்லாம் கடந்த மக்களும் சுயக் கட்டுப்பாடுகளுடன் அவசியம் விதிமுறைகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும். உயிர்களைக் காக்கத்தான் இத்தகைய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்கிறது என்பதை உணர்ந்து விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம். தளர்வுகளை அறிவித்துள்ளது என்பதற்காக விதிமுறைகளைக் காற்றில் பறக்க விட்டுவிடக் கூடாது.

செவிலியர்கள் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு பணியில் சேர்ந்தவர்கள் தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென்று போராட்டத்தில் ஈடுபட்டார்கள். மூன்று பேர் கொண்ட குழு அமைத்து அவர்களுடன் கலந்து பேசி 15 நாட்களில் தீர்வு காண வலியுறுத்தப்பட்டுள்ளது. போராட்டம் நடத்தியதற்கு வருத்தமும் தெரிவித்திருக்கிறார்கள். 4,900 செவிலியர்களைப் புதியதாக எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்தச் செவிலியர்களில் இவர்களுக்கும் முன்னுரிமை கொடுப்பதற்குத் தெரிவித்திருக்கிறோம்.

இந்திய அளவில் தமிழகம் தடுப்பூசி செலுத்துவதில் 8 அல்லது 9 இடத்தில் இருக்கிறது. கடந்த கால அதிமுக ஆட்சியில் ஜனவரி 16 அன்று தொடங்கப்பட்ட கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் சரியாக நடைபெறவில்லை.

மே-6 வரை சராசரியாக 61 ஆயிரத்து 441 பேருக்குச் செலுத்தியதில் 103 நாட்களில் 63 லட்சம் பேருக்குத் தடுப்பூசிகளைச் செலுத்தியுள்ளனர். அதிலும், தடுப்பூசிகளை வீணடித்த மாநிலத்தில் தமிழகம் முதலிடத்தில் இருந்தது.

6 சதவிகிதம் அளவுக்கு 4 லட்சத்து 34 ஆயிரம் தடுப்பூசிகளை வீணடித்துள்ளனர். ஆனால், மே 7க்குப் பிறகு ஆட்சிப் பொறுப்பேற்ற முதல்வரின் தீவிர நடவடிக்கைகளுக்குப் பிறகு இன்றுவரை 5 கோடியே 29 லட்சம் பேருக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

18 வயதுக்கு உட்பட்டோருக்கும் தடுப்பூசி செலுத்தியதில் 67 சதவிகிதம் பேருக்கு இதுவரை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இன்னும் 10 நாட்களில் உலக சுகாதார நிறுவனம், ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளவாறு 70 சதவிகிதம் என்ற இலக்கினை அடைய இருக்கிறோம்".

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x